குறைவான மழையை பயன்படுத்தி சோளம் சாகுபடி


குறைவான மழையை பயன்படுத்தி சோளம் சாகுபடி
x

தோகைமலை பகுதியில் குறைவான மழையை பயன்படுத்தி சோளம் சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர்

சோளம் விதைப்பு

வறட்சிகளை தாங்கி வளரும் தன்மை உடையதால் வறட்சியான பகுதிகளிசோளம் விதைக்கப்படுகிறது. தண்ணீர் தேங்காத அனைத்து மண் வகைகளிலும் சோளம் பயிரிடலாம். சாகுபடி செய்யப்படுகின்ற சோளமானது தானியங்களுக்காகவும், கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சோளப்பயிரானது அனைத்து பகுதிகளிலும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிரிடலாம். அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமானபயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் மழை குறைவாக பொழிந்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

கூடுதலாக கிடைக்கும்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், சித்திரை, மாசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் சோளம் சாகுடிக்கு ஏற்ற பருவ ஆகும். இதில் சித்திரை மாதத்தில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி காற்று அடிக்கும் போது அயல் மரகந்த சேர்க்கை ஏற்படுவதால் மகசூல் கூடுதலாக இருக்கும். ஆகவே சித்திரை மாத பட்டமே மிகச்சிறந்ததாக அமைகிறது. ஒரு ஏக்கருக்கு 7 கிலோ விதை சோளம் தேவைப்படுகிறது. நோய் தாக்கத்தில் இருந்து பயிர்களை பாதுகாப்பதோடு நல்ல மகசூலும் அடையலாம்.

இதில் 200 கிராம் அசோஸ்பைரில்லம், 200 கிராம் பாஸ்போபாக்டீரியா, நன்றாக ஆரிய அரிசி கஞ்சி 200 மில்லியில் சோள விதைகளை கலந்து நிழலில் உலர்த்த வேண்டும். பின்னர் 24 மணி நேரத்திற்குள் விதை நேர்த்தி செய்யப்பட்ட சோள விதைகளை விதைக்க வேண்டும்.

உழவு பணிகள்

இதேபோல் சோளம் சாகுபடி செய்வதற்கு முன்பு 4 முறை நன்றாக உழவு பணிகளை செய்ய வேண்டும். உழவு பணிகளை செய்யப்பட்டு உள்ள வயலில் மண்ணில் கட்டிகள், கல், பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் மண்ணை பொது பொதுப்புடன் வைத்திருக்க வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் மக்கிய தொழு உரங்களை நிலத்தில் பரப்பி விட்டு உழவு பணிகளை செய்ய வேண்டும்.

சோளம் சாகுபடியில் கடைசியாக உழவு பணிகளை தொடங்குவதற்கு முன்பு விதை நேர்த்தி செய்யப்பட்ட சோள விதைகளை விதைக்க வேண்டும். அதன் பிறகு கடைசி உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

நோய் தாக்கம்

இதேபோல் சோள விதைகளை பசுமாட்டு கோமியத்தில் அரை மணிநேரம் ஊறவைத்து, பின்னர வெயிலில் உலர்த்தி விதைத்தால், வறட்சியை தாங்கி வளர்வதோடு கரிப்பூட்டு நோயை கட்டுப்படுத்தலாம். இதேபோல் சோளம் சாகுபடி செய்யப்படும் வயலில் அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீயா 2 கிலோ ஆகிய உயிர் உரங்களை, 100 கிலோ மக்கிய தொழு எருவுடன் கலந்து ஈரம் இருக்கும் பொழுது தூவி விடவேண்டும். மேலும் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ காம்ப்ளக்ஸ் வயலில் ஈரம் இருக்கும் பொழுது சீராக தூவி விடலாம்.

நுண்ணுரம் மற்றும் நீர், களை நிர்வாகம்: சோளம் சாகுபடியின் போது ஒரு ஏக்கருக்கு சிறுதானிய நுண்ணுரம் 5 கிலோவுடன் 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் ஈரம் இருக்கும் போது தூவி விட வேண்டும். இதேபோல் சாகுபடி செய்யப்பட்டு உள்ள வயலில் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. மேலும் ஆட்கள் மூலம் களையை கட்டுப்படுத்தலாம் அல்லது களைக் கொல்லி மருந்துகளை தெளித்து களையை கட்டுப்படுத்தலாம். நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் சோளம் சாகுபடியின் போது மைக் கருது என்ற ஒரு வகையான நோய் தாக்கம் ஏற்படலாம்.

நல்ல மகசூல்

இது சோளக்கதிரில் பவுடர் போல் கருப்பாக காணப்படும். இதை மழை காலங்களில் எதிர் வராதது போல் பயிர் நடவினை மாற்றி அமைத்தால் மைக் கருது என்றும் நோயை கட்டுப்படுத்தலாம். இதேபோல் செவ்வட்டை என்னும் நோயானது சோளப்பயிரின் இலைகளில் சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி பாதிக்கப்பட்ட பயிர் முழுவதும் இந்த நோய் பரவி சிவப்பு கலருக்கு மாறிவிடுகிறது. இதனால் மகசூல் கடுமையாக பாதிக்கபடும். இதனால் ஒரு லிட்டர் தண்ணீரில் 2 கிராம் டைத்தேன் எம்.45 கலந்து தெளித்து இந்நோயை கட்டுப்படுத்தலாம். ஆகவே மேற்படி முறைகளில் சோளம் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தால் நல்ல மகசூல் பெற்று லாபம் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story