கோவை கார் வெடிப்பு வழக்கில் 3 பேருக்கு 27-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு


கோவை கார் வெடிப்பு வழக்கில் 3 பேருக்கு 27-ந்தேதி வரை காவல் நீட்டிப்பு
x

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரில் 3 பேருக்கு 27-ந்தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. மேலும் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் அளித்த மனு மீது இன்று விசாரணை நடக்கிறது.

சென்னை

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே அக்டோபர் மாதம் 23-ந் தேதி காரில் இருந்த சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது. இதில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் பலியானார். இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு சிறப்பு போலீசாருக்கு(என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன் (23), அப்சர்கான் (28), முகமது தல்கா (25), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (26), முகமது நவாஸ் இஸ்மாயில் (27) ஆகிய 6 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.

6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இவர்கள் அளித்த தகவலின்பேரில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 6 பேரின் பாதுகாப்பு கருதியும், அழைத்து வருவதில் நேரம் அதிகம் ஏற்படுவதாலும் 6 பேரையும் கோவை சிறையில் இருந்து காணொலிகாட்சி மூலம் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் 2 முறை ஆஜர்படுத்தினார்கள்.

இந்தநிலையில் 6 பேருக்கும் நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் 6 பேரையும் கோவை சிறையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு கொண்டு வந்து அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை தீவிரமடைந்துள்ளதால் இவர்கள் 6 பேரையும் புழல் சிறையிலேயே அடைக்கவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நேற்று காலை புழல் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி இளவழகன் முன்பு நேரில் ஆஜர்படுத்தினர்.

இதில் முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 3 பேருக்கு வரும் 27-ந்் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இவர்களில் மீதமுள்ள முகமது அசாரூதீன், அப்சர்கான், பெரோஸ் இஸ்மாயில் மற்றும் தற்போது புழல் சிறையில் உள்ள 3 பேரில் உமர் பாரூக், பைரோஸ்கான் ஆகிய 2 பேர் என மொத்தம் 5 பேரையும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story