தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 19 March 2023 6:29 PM GMT (Updated: 19 March 2023 6:32 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

குழப்பமடையும் பயணிகள்

பெரம்பலூர் மாவட்டம் ஆதனூர் வழியாக தினமும் ஏராளமானோர் பல்வேறு ஊர்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால் இப்பகுதியில் ஊரின் பெயர் பலகை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஊர் பெயர் பலகை அமைத்து மக்களின் குழப்பத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

ராஜராஜன், ஆதனூர்.


நாய்கள் தொல்லை

பெரம்பலூர் ரோஸ் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகளை கடிக்க பாய்வதால் பலருக்கு விபத்து ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்களை இவை கடிக்க பாய்வதால் அவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பெரம்பலூர்.

ஊர் பெயர் பலகை வைக்கப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், சிறுவயலூர் ஊராட்சி, பழைய விராலிப்பட்டி கிராம பகுதியில் ஊர் பெயர் பலகை இதுவரை வைக்கப்படவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஊர் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பழைய விராலிப்பட்டி

ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள பஸ் நிலைத்தில் இருந்து ஆலத்தூர் கேட் செல்லும் சாலை, பெரம்பலூர் மற்றும் திருச்சி செல்லும் சாலைகளில் இருப்புறமும் சிலர் ஆக்கிரமிப்பு செய்து கடைகளை வைத்துள்ளனர். இதனால் சாலையில் வாகனங்கள் சென்று வர முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டு கொள்கிறோம்.

மணிகண்டபிரபு, செட்டிக்குளம்.


Next Story