அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு உயிர் தண்ணீர்


தினத்தந்தி 29 Jun 2023 5:55 PM GMT (Updated: 30 Jun 2023 10:06 AM GMT)

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

திருப்பூர்

அமராவதி அணை

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள அமராவதி அணைக்கு மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீராதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது. இதன்மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இன்னும் தொடங்கவில்லை. இதனால் பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. அத்துடன் குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அமராவதிஆறு, பிரதான கால்வாய் பாசனப் பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும் குடிநீர் தேவையை போக்கவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பிவைத்தனர்.

தண்ணீர் திறப்பு

அமராவதி ஆற்றை பிரதானமாக கொண்டுள்ள 10 பழைய வாய்க்கால் பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவைக்காகவும் 1002.24 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. புதிய பாசன பகுதியில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையிலும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் 380.16 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நேற்று அமராவதி அணையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார்.

அமைச்சர்கள்

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி உயிர் தண்ணீர் திறந்து வைத்தனர். அதைத்தொடர்ந்து அமராவதி ஆற்று சட்டர்கள் மற்றும் பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது. அதில் அனைவரும் மலர் தூவி வரவேற்றனர்.

நேற்று முதல் அடுத்த மாதம் 9-ந் தேதி வரையில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் அமராவதிஆறு மூலம் பாசன பெறுகின்ற பழைய வாய்க்கால்களில் 21 ஆயிரத்து 867 ஏக்கரும், பிரதான கால்வாய் மூலம் பாசனம் பெறுகின்ற புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கரும் ஆக மொத்தம் 47ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பயன் பெறுகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன், உடுமலை ஒன்றியக்குழு தலைவர் மகாலட்சுமி முருகன், ஒன்றிய செயலாளர்கள் செழியன், செந்தில்குமார், எஸ்.கே.தங்கராஜ் என்ற மெய்ஞானமூர்த்தி, உடுமலை நகர்மன்ற தலைவர் மத்தீன், பொதுக்குழு உறுப்பினர்கள் யு.என்.பி.குமார், பாபு, திருப்பூர் தெற்கு மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் முருகன், பி.ஏ.பி. பாசன தலைவர் மொடக்குப்பட்டி ரவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் மாரிமுத்து, முத்துலட்சுமி பழனிச்சாமி, மோகனவள்ளி ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story