தொடர் மழைக்கு நெற்பயிர்கள் சேதம்


தொடர் மழைக்கு நெற்பயிர்கள் சேதம்
x
தினத்தந்தி 17 Oct 2023 7:45 PM GMT (Updated: 17 Oct 2023 7:45 PM GMT)

கூடலூர் பகுதியில் தொடர் மழைக்கு நெற்பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தேனி

நெல் சாகுபடி

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முல்லைப்பெரியாறு அணை தண்ணீர் மூலம் 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் இருபோக நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதில் கூடலூர், தாமரைக்குளம், வெட்டுக்காடு, பாரவந்தான், பி.டி.ஆர்.வட்டம், ஒழுகுவழிச்சாலை, கப்பா மடை, ஒட்டாண்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல்போக நெல் சாகுபடிக்கு வயல்களை உழுது தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர்.

நெற்பயிர்கள் சேதம்

ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல்போக நெல் பாசனத்திற்காக முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு அணையில் போதிய அளவு தண்ணீர் இருந்ததால் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல்போக நெல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கூடலூர் பகுதியில் கோ-51, வைகை-1, கோ-509, ஆர்.என்.ஆர். உள்ளிட்ட ரக நெல்களை விவசாயிகள் ஆர்வமுடன் சாகுபடி செய்தனர்.

இந்நிலையில், தற்போது நெற்கதிர்கள் நன்கு விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது. கடந்த சில நாட்களாக கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் வயல் வெளிகளில் மழைநீர் தேங்கி, நெற்கதிர்கள் சாய்ந்து கீழே விழுந்தது. அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மழையினால் நெற்பயிர் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story