பள்ளியின் புதிய கட்டிட கான்கிரீட் தூண், மேற்கூரை சேதம்


பள்ளியின் புதிய கட்டிட கான்கிரீட் தூண், மேற்கூரை சேதம்
x

வந்தவாசி அருகே அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே பள்ளியின் புதிய கட்டிட கான்கிரீட் குறுக்கு தூண் வளைந்தும், மேற்கூரை சேதமும் அடைந்துள்ளது. இதனால் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே பள்ளியின் புதிய கட்டிட கான்கிரீட் குறுக்கு தூண் வளைந்தும், மேற்கூரை சேதமும் அடைந்துள்ளது. இதனால் நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பள்ளி கட்டிடம்

வந்தவாசி ஊராட்சி ஒன்றியம், பாதூர் ஊராட்சிக்கு உள்பட்ட எய்ப்பாக்கம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.

இந்த பள்ளியின் கட்டிடம் சேதமடைந்ததால் அந்த கட்டிடத்தை முழுவதுமாக இடித்து அகற்றிவிட்டு ரூ.28 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

இதையொட்டி அந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று புதிய பள்ளிக் கட்டிடம் முன்பு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பள்ளிக் கட்டிடம் தரமற்று கட்டப்படுவதாக புகார் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

கான்கிரீட் தூண், மேற்கூரை சேதம்

தரமற்ற கட்டுமான பொருட்கள் கொண்டு இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. இதனால் கையால் சுரண்டினாலே செங்கற்களுக்கு இடையில் உள்ள கலவை கொட்டுகிறது.

மேலும் சில தினங்களுக்கு முன் அமைக்கப்பட்ட கான்கிரீட் மேற்கூரையும் சரிவர அமைக்கப்படவில்லை.

கான்கிரீட் மேற்கூரையை தாங்குவதற்காக அதன் குறுக்கே அமைக்கப்பட்ட கான்கிரீட் தூண் இப்போதே வளைந்துவிட்டது. இதனால் கான்கிரீட் மேற்கூரையும் பலமிழந்து கான்கிரீட் தூண் மீது சாய்ந்த நிலையில் உள்ளது.

சரிவர அமைக்கப்படாத இந்த பள்ளிக் கட்டிடத்தை நம்பி நாங்கள் எப்படி எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும். எனவே இந்த கான்கிரீட் மேற்கூரையை அகற்றிவிட்டு புதிய மேற்கூரை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆய்வு

இந்த நிலையில் கிராம மக்கள் பள்ளி வளாகத்தில் கூடியது குறித்து தகவலறிந்த ஊரக வளர்ச்சித்துறை வந்தவாசி உதவி செயற் பொறியாளர் ஆனந்தி உடனடியாக அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது சரிவர அமைக்கப்படாத கான்கிரீட் தூண் மற்றும் மேற்கூரையை அகற்றிவிட்டு உடனடியாக புதிதாக கான்கிரீட் தூண் மற்றும் மேற்கூரை அமைக்கும்படி உதவிப் பொறியாளர் ராஜேந்திரனுக்கு அவர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Related Tags :
Next Story