ஆடி மாத பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆடி மாத பிரதோஷத்தையொட்டிசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Aug 2023 7:30 PM GMT (Updated: 13 Aug 2023 7:30 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி:

ஆடி மாத பிரதோஷத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ சிறப்பு வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று ஆடி மாத பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நந்தி மற்றும் லிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சி அம்மன் உடனாகிய மல்லிகார்ஜுன சாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திக்கு பால், தயிர் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உபகார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் வளாகத்திலேயே சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

நெசவாளர் நகர்

இதேபோன்று தர்மபுரி நெசவாளர் நகரில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோவிலில் நந்தி மற்றும் மகாலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவிலில் நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவாணேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சாலையில் உள்ள சித்திலிங்கேஸ்வரர் கோவில், தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள பிரகதாம்பாள் சமேத அருளீஸ்வரர் கோவில், அன்னசாகரம் சோமேஸ்வரர் கோவில், சவுளுப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

தீர்த்தகிரீஸ்வரர் கோவில்

இதேபோன்று மாவட்டத்தின் முக்கிய கோவில்களான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், காரிமங்கலம் மலையில் உள்ள அருணேஸ்வரர் கோவில் உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பையர்நத்தம் மலை மீதுள்ள அமிர்தேஸ்வரர், அமிர்தாம்பிகை கோவிலில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி நந்திக்கு, பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், தேன், இளநீர், எலுமிச்சை, தயிர், உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து நந்திக்கு சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story