கிணற்றில் பள்ளி மாணவன் பிணம்


கிணற்றில் பள்ளி மாணவன் பிணம்
x

மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் பள்ளி மாணவன் பிணமாக கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே புதுப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மகன் வருண் (வயது 7). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு வருண் சென்றான். அதன்பின்னர் அவன் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து அவனை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இருப்பினும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அங்குள்ள ஒரு விவசாய கிணறு அருகே மாணவனின் செருப்பு கிடந்தது. இதையடுத்து கிணற்றில் பள்ளி மாணவன் மூழ்கி இறந்து இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகித்தனர். இதையடுத்து இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தேடினர். இதில் மாணவனை பிணமாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

போலீசார் விசாரணை

இதனிடையே இது பற்றிய தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வடபொன்பரப்பி போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கால் கழுவ சென்றபோது மாணவன் கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தானா, அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story