மேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை


மேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு; கொலையா? போலீசார் விசாரணை
x

மேல்மருவத்தூர் அருகே மாயமான மாணவன் கிணற்றில் இருந்து பிணமாக மீட்கப்பட்டான். அவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு

மாணவன் மாயம்

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அடுத்த சோத்துப்பாக்கம் நடுத்தூரை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி ரேகா. இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் மகன் சஞ்சய் (வயது 13). மகள் மித்ரா (9). குடும்பத்தகராறு காரணமாக பார்த்திபன், ரேகா இருவரும் 8 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர்.

பார்த்திபன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கோனையூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சஞ்சய் தாய் ரேகாவுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி பள்ளிக்கு சென்ற சஞ்சய் வீடு திரும்பவில்லை. மாயமானான்.

பிணமாக மீட்பு

இது குறித்து ரேகா மேல்மருவத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சஞ்சய்யை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று சஞ்சய்யின் உடல் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பெரியசாமி மேல்மருவத்தூர் போலீசில் தகவல் தெரிவித்தார்.

போலீசார் விரைந்து வந்து சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆனுப்பி வைத்தனர். ரேகாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சஞ்சய் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டானா? அல்லது தற்கொலை செய்து கொண்டானா? என்பது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.


Next Story