லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்:சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பலிகூடுதல் போலீஸ் டி.ஜி.பி.யின் அண்ணன் மகன்


சேலம்

சேலம்

லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். இவர், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருணின் அண்ணன் மகன் ஆவார்.

மருத்துவக்கல்லூரி மாணவர்

சேலம் சின்னதிருப்பதி திருவள்ளூர் சாலை முதல் தெருவை சேர்ந்த எல்.ஐ.சி. அதிகாரி குமார். இவருடைய மகன் தீபன்கர் (வயது 23). இவர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 4-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை சேலம் சித்தனூரில் தனது நண்பர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மோட்டார் சைக்கிளில் சென்றார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இரவு 10.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ரெட்டிபட்டி அருகே ரெயில்வே மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்த போது அந்த வழியாக பால் ஏற்றி சென்ற லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.

கதறி அழுதனர்

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த தீபன்கர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிந்தார். இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது தீபன்கர் இறந்தது தெரிய வந்தது. தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று தீபன்கர் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்வண்டி ஓட்டி சென்ற சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியை சேர்ந்த டிரைவர் சுபாஷ் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தில் இறந்த மருத்துவக்கல்லூரி மாணவர் தீபன்கர், கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அருணின் அண்ணன் மகன் ஆவார். அண்ணன் மகன் விபத்தில் இறந்த தகவல் தெரிந்த கூடுதல் டி.ஜி.பி. அருண் நேற்று சேலத்திற்கு வந்து அவரது உடலை பார்த்து கண்கலங்கினார்.


Related Tags :
Next Story