பழனி மலைக்கோவிலில் மகாதீபம் ஏற்றி வழிபாடு; அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம்


பழனி மலைக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திண்டுக்கல்

பழனி மலைக்கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. அரோகரா கோஷம் முழங்க பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருக்கார்த்திகை

தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான தீபத்திருவிழா கடந்த 30-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அப்போது சாயரட்சை பூஜையில் யாகசாலையில் இருந்து பரணி தீபம் எடுத்து வரப்பட்டு மூலவர் சன்னதி முன்பு ஏற்றி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக மகாதீபம் இன்று ஏற்றப்பட்டது. இதையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். அவர்கள் மலைக்கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலை அடிவாரம் பாத விநாயகர் கோவிலிலும், மலைக்கோவிலிலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

மகாதீபம்

திருக்கார்த்திகையையொட்டி மலைக்கோவிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. காலை 4.30 மணிக்கு விளாபூஜையும், 8 மணிக்கு சிறுகால சந்தி, 9 மணிக்கு காலசந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடந்தது. மதியம் 2 மணிக்கு சண்முகார்ச்சனை, தீபாராதனை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. மாலை 4.45 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளினார்.

இதையடுத்து மலைக்கோவிலின் நான்கு மூலைகளிலும் தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை காண சின்னகுமாரர் தங்கமயில் வாகனத்தில் விநாயகர் சன்னதி முன்பு எழுந்தருளினார். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோவில் முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு மலைக்கோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது கோவிலில் குவிந்திருந்த பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். சொக்கப்பனை எரிந்த பின்பு அதில் கிடைத்த 'அஞ்சன மை' மூலவர் சன்னதியில் வைத்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சின்னக்குமாரருக்கு 'அஞ்சன மை' வைத்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.

ஒருவழிப்பாதை

இதையடுத்து திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. வேணுகோபால், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

முன்னதாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பாதுகாப்பு கருதி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்ல ஒருவழிப்பாதை மாற்றப்பட்டது. அதன்படி அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாகவும் அனுமதிக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story