திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்தும் மையங்களில் ரசீது வழங்குவதில் காலதாமதம்; நீண்ட நேர காத்திருப்பால் பக்தர்கள் அவதி


திருத்தணி முருகன் கோவிலில் முடிகாணிக்கை செலுத்தும் மையங்களில் ரசீது வழங்குவதில் காலதாமதம்; நீண்ட நேர காத்திருப்பால் பக்தர்கள் அவதி
x

திருத்தணி முருகன் கோவிலில் தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்களில் சர்வர் பழுது காரணமாக ‌ரசீது வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர்

முடிகாணிக்கை செலுத்தும் மையம்

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். ஆடி மாதம் துவங்கியுள்ள நிலையில் திருத்தணி கோவிலுக்கு காவடி எடுத்து வரும் பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்த நிலையில், பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்த வசதியாக திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சரவண பொய்கை திருக்குளம் மற்றும் மலைக்கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள முடிகாணிக்கை செலுத்தும் மையங்களில் பக்தர்களுக்கு இலவசமாக மொட்டை அடிக்கப்படுகிறது.

காலதாமதம்

இதற்காக கணினி மூலம் ரசீது வழங்கப்படுகின்றது. இந்த தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்களில் கடந்த சில நாட்களாக சர்வர் பழுது காரணமாக ரசீது வழங்குவதில் தொடர் காலதாமதம் ஏற்பட்டு வருவதாக பக்தர்கள் புகார் கூறுகின்றனர். இதனால் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தும் மையங்களில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காலதாமதம் காரணமாக குடும்பத்துடன் வருகை தரும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் அவதிப்படுகின்றனர். கோவில் நிர்வாகம் உடனடியாக தலைமுடி காணிக்கை செலுத்தும் மையங்களில் சர்வர் பழுது பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story