ஆபத்தான நிலையில் இருந்த அரசு பள்ளி கட்டிடம் இடிப்பு


ஆபத்தான நிலையில் இருந்த அரசு பள்ளி கட்டிடம் இடிப்பு
x

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் இருந்த அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே ஆபத்தான நிலையில் இருந்த அரசு பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.

அரசு பள்ளி

திருமருகல் ஒன்றியம் காரையூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்

.இந்த நிலையில் கடந்த 2005- 06-ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வந்தது.

ஆபத்தான நிலையில் இருந்த கட்டிடம்

இந்த கட்டிடம் 5 ஆண்டுகளுக்கு முன்பு பராமரிப்பு பணி செய்யப்பட்டது. அதன்பின்னர் அந்த கட்டிடம் எந்தவித பராமரிப்பும் இன்றி சேதமடைந்து காணப்பட்டது.பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு எந்நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது.

இந்த ஆபத்தை உணராமல் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கட்டிடத்துக்கு அருகில் சென்று விளையாடி வந்தனர். இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பவே பெற்றோர் அச்சப்பட்டு வந்தனர். இந்த ஆபத்தான பள்ளி கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இடிக்கப்பட்டது

இது குறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த 22-ந் தேதி படத்துடன் பிரசுரமானது.இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் இருந்த அரசு பள்ளி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து பள்ளி கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை தொடர்ந்து உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளர்.

1 More update

Next Story