ஓசூரில் தொழில்முனைவோர் ஆர்ப்பாட்டம்


ஓசூரில் தொழில்முனைவோர் ஆர்ப்பாட்டம்
x

சிறு, குறு நிறுனங்கள் வேலை நிறுத்தத்ையொட்டி ஓசூரில் தொழில்முனைவோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் 2,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் இதர பொறியியல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிறுவனங்கள் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை அளிக்கிறது. இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் மற்றும் ஜாப் ஆர்டர்களுக்கு உரிய விலையை வழங்க பெருநிறுவன வாடிக்கையாளர்கள் முன்வரவேண்டும். சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் சுமூக தீர்வு காண வலியுறுத்தி 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்தன. அதன்படி நேற்று ஓசூரில் உள்ள அனைத்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. ஓசூர் மாநகராட்சி பூங்கா அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தின் (ஹோஸ்டியா) தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இணைத்தலைவர் எஸ்.மூர்த்தி, ஹோஸ்டியா செயலாளர் ஸ்ரீதரன், பொருளாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மேலும் முன்னாள் தலைவர்கள் வெற்றி.ஞானசேகரன், ரமணி சீனிவாசன், தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் தொழில்முனைவோர், தொழிலாளர்கள் பதாகைகளை ஏந்தியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story