கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்


கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2023 6:45 PM GMT (Updated: 4 Jan 2023 6:46 PM GMT)

பணி நிரந்தரம் செய்யக்கோரி கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை கண்டித்தும், இந்த அரசாணையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த செவிலியர்கள் சேலத்தில் ஒன்றுதிரண்டு கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக 4-வது நாளாக நேற்று விழுப்புரம் வந்த அவர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் வீரராகவன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், எங்கள் கோரிக்கையை அரசு பரிசீலித்து எங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அடுத்தகட்டமாக நாங்கள் சென்னையில் நாளை (அதாவது இன்று) உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். எங்களது கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என்றனர்.


Next Story