அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை


அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
x
தினத்தந்தி 10 Dec 2023 10:28 AM GMT (Updated: 10 Dec 2023 11:25 AM GMT)

நாளை நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

சென்னை,

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. எனவே கடந்த 7-ம் தேதி தொடங்க இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு 11-ந்தேதி நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு, தேர்வு அட்டவணையும் வெளியிடப்பட்டது.

இந்த சூழலில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ள நீர் குடியிருப்புகளுக்குள் சென்றதால், குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் தற்போது நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். மேலும், 7 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நாளைதான் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.

எனவே, தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில், நாளை நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். நாளை தொடங்க வேண்டிய தேர்வுகள் புதன் கிழமை தொடங்கும் என்றும், இதற்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. அதில், 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வுகள், வருகிற 13-ந்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அட்டவணைப்படி 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை இருக்கும் மாணவர்களுக்கு ஒரே தேதியில் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதன்படி 13 ஆம் தேதி தமிழ், 14 ஆம் தேதி விருப்ப மொழிப்பாடம், 15 ஆம் தேதி ஆங்கிலம், 18 ஆம் தேதி கணக்கு, 20 ஆம் தேதி அறிவியல், 21 ஆம் தேதி உடற்கல்வி, 22 ஆம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் 12.30 மணி வரையிலும் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மதியம் 2 முதல் 4.30 மணி வரையும் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story