மரணத்தில் தள்ளும் மனஅழுத்தம்


மரணத்தில் தள்ளும் மனஅழுத்தம்
x
தினத்தந்தி 16 July 2023 8:32 PM GMT (Updated: 17 July 2023 12:18 PM GMT)

கோவை சரக போலீஸ் டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை ஏற்படுத்திய அதிர்வலை இன்னும் அடங்கவில்லை.

திருச்சி

மனஅழுத்தம்

இளம் வயதில் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர், வாழ்வில் தனது இலக்கு பற்றி தெளிவாக இருந்த ஒருவர், தன்னைத்தானே செதுக்கி உயர்ந்த ஒருவரின் இந்த விபரீத முடிவு, வேதனைக்கு இணையாக வியப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

டி.ஐ.ஜி. விஜயகுமார், 'அப்சசிவ் கம்பல்சிவ் டிசாடர்' (ஓ.சி.டி.) எனப்படும் மனஅழுத்த பிரச்சினையால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறார். தனது பிரச்சினை குறித்து நெருங்கிய வட்டத்தில் பேசவும் செய்திருக்கிறார். ஆனால் ஒரு காலை வேளையில், யாரும் எதிர்பாராத நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது.

டி.ஐ.ஜி. விஜயகுமாரின் பணியிலோ, குடும்பத்திலோ பெரிதாக எந்த பிரச்சினையும் தெரியாத நிலையில், மனஅழுத்தம்தான் அவருக்கு மரணத்தை கொண்டுவந்துவிட்டது.

மறைந்திருந்து தாக்கும் இந்த மனஅழுத்தமே அடுத்த 10 ஆண்டுகளில், வேறு எந்த வியாதியையும் விடவும் நாடுகளுக்கு பெரும் சுமையாக மாறும் என்று கூறுகிறது உலக வங்கி.

முன்வரிசையில் இந்தியா

நமது இந்தியா, இப்போதே உலகின் மனஅழுத்த தலைநகரமாக திகழ்கிறது என்பது மிகைப்படுத்தல் இல்லாத செய்தி. இந்தியாவில் இப்போது 3-ல் ஒருவருக்கு மனஅழுத்த அறிகுறிகள் இருக்கின்றன என்றால், நிலைமையின் தீவிரம் புரியும். உலகிலேயே மனஅழுத்த பிரச்சினை கொண்டோர் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ஒலி எழுப்புகிறது.

லான்செட் உளவியல் இதழில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'இந்திய மாநிலங்களில் மனநல பிரச்சினைகளின் சுமை' கட்டுரையின்படி, 2017-ம் ஆண்டில் நாட்டில் சுமார் 20 கோடி பேர் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்தனர். அதாவது 7 பேரில் ஒருவர் அல்லது மொத்த மக்கள்தொகையில் 14.3 சதவீதம் பேர்.

சர்வதேச அளவில் என்று பார்த்தால், 30 கோடிக்கு மேற்பட்டோர், மனஅழுத்தத்தால் அல்லல்பட்டு வருகின்றனர். ஒருவர் இயல்பாக பேசுகிறார், சிரிக்கிறார், அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதால் அவருக்கு மனஅழுத்த பாதிப்பு இல்லை என்பதில்லை. வசதியில், சமூக அந்தஸ்தில் உயர்நிலையில் இருக்கிறார் என்பதற்காக மனநல பிரச்சினை இருக்காது என்று கூறுவதற்கில்லை.

ஆழ்கடலுக்குள் உள்ள எரிமலையாக அது எவருக்குள்ளும் வெளித்தெரியாமல் அமைதி காக்கக்கூடும். என்றாவது ஒருநாள் திடீரென அது வெடிக்கக்கூடும்.

உரிய நேரத்தில் கவனிக்கப்பட்டு, முறையான சிகிச்சை அளிக்கப்படாத மனஅழுத்தம் முற்றலாம், விபரீத விளைவுகளுக்கு இட்டுச் செல்லலாம். கடும் மனஅழுத்தத்துக்குள்ளான நபரால், அவருக்கு நெருங்கியவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்றாலும், சுயஅபாயத்துக்கான வாய்ப்பே அதிகம். தன்னைத்தானே மரண பள்ளத்தாக்கில் தள்ளிவிடச் செய்துவிடக்கூடும்.

மனஅழுத்தத்துக்கு உள்ளான அனேகம் பேர் தங்களுக்கு தற்கொலை எண்ணம் வந்து சென்றதை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். தாமே உயிரை மாய்த்துக்கொண்டவர்களில் 18 சதவீதம் பேர், ஏற்கனவே அதற்கான முயற்சிகளில் தோல்வி கண்டவர்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

மாறிவரும் சமூக, பொருளாதார சூழ்நிலை, மனஅழுத்தத்துக்கு ஒரு மிகப்பெரிய காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. குடும்பம், படிப்பு, வேலையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் சவால்கள் ஒரு சாதாரண மனிதனை மூச்சுத்திணற செய்கின்றன. பலர், வெளியே தெரியாமல் உள்ளுக்குள் அலறி கொண்டிருக்கிறார்கள். யாராவது ஒருவர் தமக்கு ஆறுதல் கரம் நீட்ட மாட்டார்களா என்று தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

மூத்தவர்கள் ஆறுதல்

முன்பெல்லாம் குடும்பத்தில் ஒருவர் சுணங்கும்போதும், துவளும்போதும் அவர்களை தேற்றவும், ஆற்றுப்படுத்தவும் மூத்தவர்கள் இருந்தார்கள். அவர்கள் அரிய இனமாகிவிட்ட இன்றைய நிலையில், அந்த இடத்தை சமூக ஊடகங்கள் எடுத்துக்கொள்ள முயல்கின்றன. அவற்றில் அள்ளிவிடப்படும் அறிவுரைகளில் எத்தனை உத்தமமானவை என்பது அலசலுக்குரிய விஷயம்.

இன்று பொதுவாக எல்லா விஷயங்களிலும் விழிப்புணர்வு அதிகரித்திருக்கிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது, மனம் சார்ந்த விஷயங்கள், பிரச்சினைகள் குறித்த புரிதல் குறைவுதான்.

எங்கே தனக்கு இந்த மாதிரி அடிக்கடி தோன்றுகிறது, பிரச்சினை உள்ளது என்று பேசினால் தன்னை தவறாக எண்ணிவிடுவார்களோ என்ற பயம், கூச்சம், தயக்கம் பலருக்கு இருக்கிறது. அதற்கு அவசியமில்லை, பிற உடல்நல பிரச்சினைகளைப் போல இதுவும் ஒரு பிரச்சினைதான், சரிப்படுத்தக்கூடியதுதான் என்ற தெளிவு ஏற்பட வேண்டும். தங்களின் நம்பிக்கைக்கு உரியவர்களிடம் அல்லது தகுதிவாய்ந்த நபரிடம் மனம் திறக்க வேண்டும்.

குடும்பத்தினர், நண்பர்களும், தங்கள் அன்புக்குரியவர்கள், நெருங்கியவர்களின் அன்றாட செயல்பாடுகள், நடத்தையில் ஏற்படும் மாற்றத்தை கவனித்து, கனிவோடு அணுகி, இயல்புக்கு திரும்ப உதவ வேண்டும்.

இனம்புரியாத சோகம், விரும்பிச் செய்யும் செயல்களில் குறையும் ஆர்வம், சோர்வு, அன்றாட நடவடிக்கைகளில் தடுமாற்றம், ஞாபகமறதி போன்றவை மனஅழுத்தத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். சோர்வு, பசியுணர்வில் மாற்றம், அதிகரிக்கும், குறையும் தூக்கம், படபடப்பு, பதற்றம், கவனக்குறைவு, முடிவெடுக்க இயலாமை, தகுதியற்றவராகவோ, குற்ற உணர்வாகவோ உணர்தல், நம்பிக்கையற்ற நிலை, தன்னைத்தானே வருத்திக்கொள்ளுதல் போன்றவையும் கவனிக்க வேண்டியவை.

மன பாதிப்புகளைப் போல, செரட்டோனின், டோபமைன் போன்ற 'இயக்குநீர்' (ஹார்மோன்) சுரப்பு குறைபாடும் மனநலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம், பிற உடல்நல பாதிப்புகளைப் போல இதையும் உரிய சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

எல்லா விஷயங்களையும் போல மனஅழுத்தத்தையும் முற்றிலும் தவிர்க்க முடியாது. ஆனால் இவ்விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதின் மூலம், பல இன்னுயிர் இழப்புகளை தடுக்கலாம். இதுவும் ஒரு தனிமனித, சமூக கூட்டுப்பொறுப்புதான்.

இன்றைய சமுதாயத்தில் மனஅழுத்தம் அதிகரித்திருக்கிறதா? என்பது குறித்து மனநல மருத்துவ நிபுணர்கள் மட்டும் அல்லாது, வேறு சிலரிடமும் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் கூறியதாவது:-

குடும்பம் வேறு, பணியிடம் வேறு...

லால்குடி அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் விசாலாட்சி:- பணி செய்கிற இடத்தில் ஏற்படுகிற மனஅழுத்தத்தை போக்குவதற்கு முதலில் நாம் பார்க்கிற வேலையை ஏற்றுக்கொள்ள பழகிக்க வேண்டும். அதையும் தாண்டி அளவுக்கு அதிகமாக வேலைகள் திணிக்கப்பட்டால் மேல் அதிகாரிகளிடம் எடுத்து கூறலாம். ஒருவேளை நம்முடைய உடல் மற்றும் மனதுக்கு ஏற்ற வகையில் வேலை அமையாவிட்டால் தொடர்ந்து மனஅழுத்தத்துடனேயே வேலை பார்க்காமல் நமக்கு ஏற்றாற்போல் வேறு வேலையை தேடி கொள்ள வேண்டும். அடுத்ததாக உணவு பழக்க வழக்கம் ஆரோக்கியமானதாகவும், சரியான தூக்கமும் அவசியம். வேலை முடிந்து வீட்டுக்கு சென்றதும் மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். வீட்டிலேயும் அலுவலகம் பற்றி சிந்தித்து கொண்டு இருக்கக்கூடாது. குடும்பம் வேறு, பணியிடம் வேறு என்று பிரித்து கொள்ள வேண்டும். பணி இடத்தில் போட்டி, பொறாமை, புறம்பேசுதல் என அனைத்து துறைகளிலும் இருக்கும். அதை நினைத்து மனஅழுத்தத்துக்கு ஆளாகக்கூடாது. நம்முடைய வேலையை சரியாக செய்துவிட்டு சென்றுவிட வேண்டும். மற்ற சிந்தனைகளை மனதில் ஏற்றி கொள்ளாமல் இருந்தால் மனஅழுத்தத்தை தவிர்க்கலாம்.

வேலை பளு

அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ்குமார்:- பெரும்பாலும் வேலை பளு காரணமாக தான் மனஅழுத்தம் ஏற்படுகிறது. நீண்டநேரத்தை எடுத்து கொண்டு முடிக்க வேண்டிய ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதால் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அதற்கு போதுமான காலஅவகாசம் இருந்தால் அதே வேலையை மனஅழுத்தமின்றி எளிதாக செய்துவிடலாம். மனஅழுத்தத்தை குறைக்க வேண்டுமானால் எதையும் நேர்மறையான எண்ணத்தோடே அணுக வேண்டும். பின்னர் யோகா, உடற்பயிற்சி கைகொடுக்கும். இதுதவிர வேறு வழி கிடையாது. சிலபேர் மனஅழுத்தத்தை போக்க செல்போன்களை பார்த்து கொண்டு இருப்பார்கள். அது தவறானது. செல்போன் பார்ப்பதால் மனஅழுத்தம் குறைவது போன்ற ஒரு எண்ணம் தோன்றும். ஆனால் அதுவே கூடுதல் மனஅழுத்தத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு மாறாக, உடலில் வியர்வை வழியும் வகையில் ஏதாவது ஒரு உடற்பயிற்சியோ அல்லது காலை நேரத்தில் 10 நிமிடம் அமர்ந்து தியானமோ செய்தால் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

யோகா

மணப்பாறையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார்:- மன அழுத்தம் என்பது இப்போது சிறுவர் முதல் பெரியவர் வரை மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மன அழுத்தத்திற்கு ஆட்படும் நிலை உள்ளது. இளைய தலைமுறையை பொறுத்தவரை அவர்களின் தீய செயல்கள் தான் மன அழுத்தத்திற்கு காரணமாக அமைந்து விடுகிறது. மன அழுத்தத்தை மிக எளிதில் குணப்படுத்தி விடமுடியும். யோகா தொடர்ந்து செய்து வந்தால் மன அழுத்தத்தில் இருந்து விடுதலை பெற முடியும். எனவே வளரும் தலைமுறையினர் யோகா மீது தனி கவனம் செலுத்திட வேண்டும். விரும்பிய நல்ல செயல்களை விருப்பத்துடன் நிறைவாக செய்தாலே மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

மனம் விட்டு பேச வேண்டும்

துறையூரை சேர்ந்த முன்னாள் அரசு வக்கீல் ராமசாமி:- மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மன அழுத்தத்தில் இருந்து பாதிக்கப்படாமல் இருக்க ஒவ்வொரு தனி மனிதனும் தனக்காக ஒரு மணி நேரமாவது செலவிட வேண்டும். மேலும் தன நண்பர்களிடமோ அல்லது தனது துணையிடமோ மனம் விட்டு பேசி கொள்ள வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகளிடம் நண்பனை போல் பழகி அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை கேட்டு அதனை தீர்க்க வேண்டும். மன அழுத்தத்தை கையாள உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.

போட்டி, பொறாமை

தா.பேட்டையை சேர்ந்த டாக்டர் மனோகரன்:- மன அழுத்தம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்வது. திறந்த மனதுடன் செயல்பட்டு வந்தால் எந்த அழுத்தமும் நம்மை நெருங்காது. நண்பர்களிடம் மனம் விட்டு பகிருங்கள். பெரியவர், சிறியவர் என்ற எண்ணம் வேண்டாம். வேலைப்பளு தேவையில்லை. போட்டி, பொறாமை போன்றவைகளை கைவிட வேண்டும். கடவுள் நமக்கு தேவையானவற்றை நிச்சயம் கொடுப்பார். கிடைப்பதை ஏற்று சந்தோஷம் கொள்ள வேண்டும். வாழ்க்கையை அனுபவித்து வாழ வேண்டும். தற்கொலை என்பது தவறான செயலாகும்.

அமுக்கரா சூரணம்

உப்பிலியபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலைய சித்த வைத்தியர் கொடிவேல்:- மன அழுத்தத்துக்கு உள்ளானவர்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சாப்பிடுவது, தூக்கமின்றி காணப்படுவது, சுற்றத்தை விட்டு விலகியிருப்பார்கள். மன அழுத்தத்தை போக்க யோகா, நடனம், தியானம், இசை, நடைபயிற்சி மற்றும் டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். இதேபோல் தினமும் ½ மணி நேரம் தோட்டக்கலை சார்ந்த வேலைகளில் ஈடுபடுவதின் மூலம் சுமார் 200 கலோரிகளை எரிக்க முடியும். தோட்டக்கலை மன அழுத்தத்தை குறைக்கும் பண்புகளை கொண்டிருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழலை பசுமையாக்கி, சுத்தமான காற்றையும் சுவாசிப்பதால் மன இறுக்கம் தளர்கிறது. சித்த வைத்தியத்தில் அமுக்கரா சூரணம் மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மன அழுத்தம் போக்கும் உணவு வகைகள்

ஆரஞ்சு பழ ஜூஸ் குடிப்பதின் மூலம் உடலும், மனமும் கொஞ்சம் புத்துணர்ச்சி அடையும். இதில் உள்ள வைட்டமின் சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை மன அழுத்தம் போக்கும். அதேபோல் கீரைகள், ஆவகேடோ பச்சைக்கீரைகள், இலைக்காய்கறிகளில் அதிகளவு மெக்னீசியம் உள்ளது. இவற்றை சாப்பிடலாம். ஆவகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தில் 14 வகையான நுண்சத்துக்கள் உள்ளன. அதில் உள்ள செரடோனின் மன அழுத்தத்தை குறைக்கிறது. நார்ச்சத்து உணவுகள் மன அழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு உண்டு. அவை 'செரடோனின்' என்கிற ஹார்மோனை சுரக்க வைக்கிறது. இது மூளையை அமைதியாக வைத்திருக்க உதவும். மீன் உணவுகள், பசலைக் கீரை மன உளைச்சலை குறைக்க செய்யும் என்பது எவ்வளவு உண்மையோ அதேபோல் மீன் உணவில் அதிகமாக இருக்கும் ஒமேகா-3 என்கிற கொழுப்புச் சத்தும் மனஅழுத்தத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மன அழுத்தம் இருப்பவர்கள், பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை வாரத்துக்கு மூன்று முறை 15 கிராம் உட்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். ஆனால், ரத்தத்தில் சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருந்தால், இவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலும் எண்ணெய் வகைகள் மற்றும் இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது என்று இயற்கை மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இளைஞர்களின் தயக்கம்

உலகிலேயே அதிகமான இளையோரை கொண்ட இளமையான தேசங்களில் ஒன்று இந்தியா என்பது நமக்கு பெருமை என்றால், அவர்களில் கணிசமானோர் மனஅழுத்தத்தால் வாடுகின்றனர் என்பது கவலை தரும் சிறுமை. ஐக்கிய நாடுகள் வரையறையின்படி, 15 முதல் 24 வயதுக்குட்பட்டோர், இளையோர். இந்திய மக்கள்தொகையில் இவர்கள் 10 சதவீதம். இந்த பிரிவினர் மத்தியில் நிலவும் மனஅழுத்த விகிதம் 31 முதல் 57 சதவீதம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். இந்த வயதினரில் 2-வது அதிகமாக உயிரைப் பறிப்பது, மனஅழுத்தத்தால் ஏற்படும் தற்கொலை முடிவு என்பது அதிர்ச்சி தகவல். சர்வதேச அளவில் ஒப்பிடுகையில், மன நெருக்கடி குறித்து வெளிப்படையாக பேசி, அதற்கு தீர்வு காணவும் இந்திய இளைஞர்கள்தான் அதிகம் தயக்கம் காட்டுகின்றனர் என்கிறது ஒரு பன்னாட்டு ஆய்வு.

ஆனந்த அரட்டை

இந்திய இளைய சமுதாயத்தை அதிகம் மனஅழுத்தத்தில் தள்ளுவது, படிப்பில் ஜொலிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் என்பது ஆச்சரியம் அளிக்கும் தகவல் அல்ல. அதேபோல, அதிகபட்ச சமூக ஊடக உலாவலும் மனநலத்தை சீர்குலைக்கிறது. அதனால் தமக்குத்தாமே ஏற்படும் தேவையற்ற, பொருத்தமற்ற ஒப்பீடு, சுயமரியாதை குறைவு, தனிமை, விரக்திக்கு வித்திடுகிறது என்கிறது ஓர் ஆய்வு. பொதுவாகவே தற்போது ஆரோக்கியமான நேரடி விவாதங்கள், ஆனந்தமான அரட்டைகள் குறைந்துவிட்டன. வீட்டுக்குள்ளும் அத்தியாவசியத்துக்கு மட்டுமே என்ற அளவில் வார்த்தைகள் சுருங்கி வருகின்றன. இவையெல்லாம் மனஅழுத்தத்துக்கான சிறுசிறு காரணிகளே. இரவில் தனித்தனியே நெடுநேரம் செல்போன் ஒளிரும் வீடுகளில், கண்ணுக்கு தெரியாத இருள் சூழ்கிறது.


Next Story