கரும்பு தோட்டத்தில் அதிரடி சோதனை:டிரோன் மூலம் கண்டறிந்து 50 லிட்டர் சாராய ஊறல் அழிப்புவியாபாரி வீட்டுக்கு 'சீல்' வைப்பு


கரும்பு தோட்டத்தில் அதிரடி சோதனை:டிரோன் மூலம் கண்டறிந்து 50 லிட்டர் சாராய ஊறல் அழிப்புவியாபாரி வீட்டுக்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 30 July 2023 6:45 PM GMT (Updated: 30 July 2023 6:45 PM GMT)

கரும்பு தோட்டத்தில் டிரோன் மூலம் கண்டறிந்து 50 லிட்டர் சாராய ஊறல் அழிக்கப்பட்டது. மேலும் சாராயம் காய்ச்ச பயன்படுத்திய வியாபாரியின் வீட்டுக்கும் ‘சீல்’ வைக்கப்பட்டது.


திருக்கோவிலூர்,

அரகண்டநல்லூர் அருகே உள்ள வீரபாண்டி கிராமத்தில் சாராயம் காய்ச்சப்படுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அவரது உத்தரவின்பேரில் விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையில் அரகண்டநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ் மற்றும் போலீசார் வீரபாண்டி கிராமத்தில் சாராயவேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்துக்குள் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இருப்பினும் உள்ளே எந்த பகுதியில் காய்ச்சப்படுகிறது என்பது தெரியாத சூழலில், போலீசார் டிரோன் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

டிரோன் மூலம் கண்டுபிடிப்பு

கரும்பு தோட்டத்துக்கு மேல் பகுதியில் டிரோனை பறக்க விட்டு, அதன் மூலம் எந்த இடத்தில் சாராயம் சாய்ச்சப்படுகிறது என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு சென்று 50 லிட்டர் சாராய ஊறலை கொட்டி அழித்தனர்.

இதனிடையே போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட சாராய வியாபாரியான அதே ஊரை சேர்ந்த பாவாடை மகன் முருகன் என்ற ஆந்திரமணி(வயது 48) என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வீட்டுக்கு 'சீல்' வைப்பு

இதனை தொடர்ந்து கரும்பு தோட்டத்துக்கு அருகில் உள்ள வீட்டையும் சாராயம் காய்ச்ச பயன்படுத்தியது போலீசாருக்கு தெரிந்தது. எனவே போலீசார் முன்னிலையில் வருவாய்த்துறையினர் அவரது வீட்டை பூட்டி 'சீல்' வைத்தனர்.


Next Story