திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி - வனத்துறை


திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி - வனத்துறை
x

திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

ஏர்வாடி,

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடி மலையில் உள்ள திருமலைநம்பி கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்ததாகும். வனத்துறை சோதனை சாவடியில் இருந்து, திருமலைநம்பி கோவில் வரையிலான மலைப்பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 33 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி சாலை பராமரிப்பு பணிகள் தொடங்கியது. இதையடுத்து திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இந்நிலையில் கடந்த மாதம் சாலை பராமரிப்பு பணிகள் முழுமையடைந்துள்ளன. ஆனால் பக்தர்களுக்கு தொடர்ந்து அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். இதனிடையே நேற்று முதல் திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடையை வனத்துறையினர் விலக்கினர். பக்தர்களுக்கு கோவிலுக்கு செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வனத்துறை சோதனை சாவடி வழியாக கோவிலுக்கு சென்றனர்.

இதேபோல் வனத்துறை அனுமதி பெற்று இயங்கும் ஜீப்களும் கோவிலுக்கு இயங்க தடை நீக்கப்பட்டது. 3 மாதங்களுக்கு பின் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story