பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்


பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.

கோயம்புத்தூர்
கோவை


புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர்.


புரட்டாசி சனிக்கிழமை


பெருமாளுக்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். அன்றைய தினத்தில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இதன்படி கடைசி சனிக்கிழமையான நேற்று கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.


கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்று காலை முதல் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


குருவாயூரப்பன் அலங்காரம்


கோவை பேட்டை உப்பார வீதியில் உள்ள கல்யாண வெங்கட் ரமணா கோவிலில் பெருமாளுக்கு நேற்று அதிகாலையில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து குருவா யூரப்பன் அலங்காரத்தில் பெருமாள் காட்சி அளித்தார். பக்தர்கள் துளசி மாலை அணிவித்து பெருமாளை வழிபட்டனர். பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு ரத்தின அங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.


ஆவாரம்பாளையம் பார்த்தசாரதி கோவிலில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் வழிபட்டு சென்றனர். அவர்களுக்கு துளசி தீர்த்தம் வழங்கப்பட்டது.


கோவை ராமநாதபுரம் பெருமாள் கோவில், பீளமேடு ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



Next Story