பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் நேற்று 6-வது வார ஞாயிற்றுக்கிழமையையொட்டி ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர்.

திருவள்ளூர்

ஆயிரக்கணக்கான பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று 6-வது வார ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணமான ரூ.100, ரூ.30 மற்றும் தர்ம தரிசனம் உள்ளிட்ட வரிசைகளில் பக்தர்கள் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், அதிகாலை மூலவர் சுயம்பு அம்மனுக்கு மகாபிஷேகம், விசேஷ அலங்காரம், ஜோதி தரிசனம், உற்சவர் பவானி அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது. பின்னர், உற்சவர் உள்பிரகார புறப்பாடு நடைபெற்றது. மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசல்

உற்சவர் பவானி அம்மன் காமதேனு வாகனத்தில் கெஜலட்சுமி அலங்காரத்தில் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு ஒரே நேரத்தில் பல்வேறு வாகனங்களில் வந்ததால் பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலை, பெரியபாளையம்-ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, பெரியபாளையம்-ஆரணி நெடுஞ்சாலை உள்ளிட்ட 3 சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதனால் வாகனங்கள் சாலைகளில் இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரம் ஸ்தம்பித்து நின்றது. பெரியபாளையம் மேம்பாலத்தை கடக்க வாகன ஓட்டிகள் பலமணி நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.


Next Story