பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

வாரவிடுமுறையையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

திண்டுக்கல்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை இருக்கும். அவ்வாறு வரும் பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்துவதுடன் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை செலுத்துகின்றனர்.


மேலும் வாரவிடுமுறை, சுபமுகூர்த்த நாட்களில் வெளியூர் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் பழனிக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். எனவே அன்றைய தினம் வழக்கத்தை விட பக்தர்கள் வருகை இருமடங்கு காணப்படும். அதன்படி வார விடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக மலைக்கோவில், பாதவிநாயகர் கோவில், அடிவாரம், கிரிவீதி ஆகிய இடங்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். இதனால் தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



Next Story