திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


திருத்தணி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.

திருவள்ளூர்

பக்தர்கள் குவிந்தனர்

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 5-ம் படைவீடாக திகழ்வது திருத்தணி முருகன் கோவில். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த கோவிலுக்கு விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படும்.

இந்த நிலையில் நேற்று விஜயதசமியையொட்டி அரசு விடுமுறை தினம் என்பதால் திருத்தணி முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் குவிந்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து முருக பெருமானை தரிசித்தனர். அதே போல் ரூ.100 தரிசன கட்டண டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி

முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் இதற்கு முன்பு ரூ.150 விரைவு தரிசன வழியில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இந்து அறநிலைத்துறை ஆணையரின் உத்தரவின்படி முருகன் கோவிலில் ரூ.25, ரூ.150 விரைவு தரிசன கட்டண வழிகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோவிலுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே கோவில் நிர்வாகம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான சிறப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுவழி மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன கட்டணத்தில் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story