திருத்தணி முருகன் கோவிலில் படிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை


திருத்தணி முருகன் கோவிலில் படிகள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை
x

திருத்தணி முருகன் கோவிலில் கிடப்பில் போடப்பட்ட படிக்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்

படிகள் அமைக்கும் பணி

முருகப்பெருமானின் அறுப்படை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழ்வது திருத்தணி மலைக்கோவில். இந்த கோவிலில் உள்ள 9 நிலை கிழக்கு ராஜகோபுரம் கட்டும் பணிகள் நிறைவடைந்து 2 ஆண்டுக்கு மேல் ஆனது. ஆனால் கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து மாடவீதியினை இணைக்கும் படிகள் அமைக்கப்படாமல், பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் வகையில் ரூ.92 லட்சம் செலவில் 56 படிகள் அமைக்கும் பணியை கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதனையடுத்து தொடர்ந்து 2 மாதங்கள் ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் படி பாதைகளை மண் நிரப்பி சமன் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தது.

விரைந்து முடிக்க பக்தர்கள் கோரிக்கை

பின்னர் அடுத்தக்கட்டமாக படிகள் அமைக்கும் பணி கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தொடங்கப்படாமல் நிறுத்தப்பட்டது. தற்போது வரை ராஜகோபுரத்தையும், மாடவீதியையும் இணைக்கும் படிகள் அமைக்கும் பணிகள் நடைபெறாமல் கிடப்பில் உள்ளது. மேலும் படிகள் அமைக்க சமன் செய்து வைத்துள்ள மண் மழையால் சரிந்தும், அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதேபோல் ராஜகோபுரத்தின் நுழைவுப் பகுதியில் பொருத்துவதற்கு தேவையான வாசற்கால் தூண்களில் சிற்ப வேலைபாடுகள் முடிந்து உள்ளது. எனவே முருகன் கோவில் ராஜகோபுரத்தின் இருபுறங்களின் வாசற்கால் தூண்கள் பொருத்த வேண்டும், ராஜ கோபுரத்தையும் மாட வீதியினை இணைக்கும் படிகள் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story