திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 5 July 2022 9:59 AM GMT (Updated: 5 July 2022 10:43 AM GMT)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் பக்தர்கள் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தி வேண்டுதலை நிறைவேற்றினர்.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொது திரிசுதந்திரர்கள் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதம் ஆனி சஷ்டி திதி நாளில் பால்குடம், காவடி எடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் 43-வது ஆண்டை முன்னிட்டு இன்று காலை ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் விரதமிருந்த பக்தர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பால்குடம், காவடி மற்றும் அலகு குத்தினர். மேலும் சிலர் 16 அடி நீளம் உள்ள வேல் குத்தி இருந்தனர்.

அவர்கள் அனைவரும் மேளதாளம் முழங்க 8 வீதிகளிலும் ஊர்வலமாக வந்து சன்னதி தெரு வழியாக சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு மூலவருக்கு அபிஷேகம் நடந்தது.

மாலையில் பக்தர்கள் கோவில் கடற்கரையில் பூக்குழி இறங்கியும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்செந்தூர் பொது திரிசுதந்திரர்கள் சபையினர் செய்திருந்தனர்.


Next Story