சிறப்பாக பணியாற்றிய பெரம்பலூர் போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு


சிறப்பாக பணியாற்றிய பெரம்பலூர் போலீசாருக்கு டி.ஜி.பி. பாராட்டு
x

சிறப்பாக பணியாற்றிய பெரம்பலூர் போலீசாரை டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடியை சேர்ந்த சுதா என்பவர் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்குக்கு கடந்த மாதம் 29-ந்தேதி ஆஜராக வந்தார். அப்போது அவரை அவரது கணவர் செல்வராஜ் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ஆயுதப்படை போலீஸ்காரர் அழகேசனும், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் தனிப்பிரிவு அலுவலகத்தில் பணிக்கு சென்ற ஆயுதப்படை போலீஸ்காரர் குமாரும் சேர்ந்து தடுத்து சுதாவை காப்பாற்றினர். இதேபோல் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் பதியப்பட்ட வாகன விபத்து வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு தண்டனை பெற முதல் நிலை போலீஸ்காரர் அழகுவேல் சிறப்பாக செயல்பட்டார்.

இந்த நிலையில் திருச்சியில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு மேற்கண்ட போலீசாரின் சிறப்பான பணியினை பாராட்டி அழகேசன், குமார், அழகுவேல் ஆகியோருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


Next Story