தர்மபுரியில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி


தர்மபுரியில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில்பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 11 Feb 2023 7:00 PM GMT (Updated: 11 Feb 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தர்மபுரி மண்டலம் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்வு எழுதும் அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் குழந்தைகளை அரசு பொதுத்தேர்வுக்கு தயார்படுத்தி கொள்ள விழிப்புணர்வு நிகழ்ச்சி தர்மபுரியில் நடைபெற்றது. இந்த பயிற்சியை சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களின் குழந்தைகள் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் தங்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும். பொதுத்தேர்வு அட்டவணையில் உள்ளபடி பாடங்களுக்கு ஏற்றவாறு நேரத்தை ஒதுக்கி படிக்க வேண்டும். தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் அதிக நேரம் படிக்க வேண்டும் என்று பெற்றோர் அழுத்தம் கொடுக்கக் கூடாது.

தேர்வு எழுத தயாராகும் மாணவ, மாணவிகள் சத்தான உணவை சாப்பிட வேண்டும். காய்கறி, பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும். தேர்வு எழுதும் நாட்களுக்கு முன்பு விளையாட்டில் ஈடுபடுவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மாணவ, மாணவிகளுக்கு தேர்வுக்கு தேவையான உபகரணங்களையும் அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர்கள் ஜீவரத்தினம், ரவி லட்சுமணன், மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி, ஆசிரியர்கள் அறிவொளி, சரவணன், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், தொழிற்சங்கத்தினர், மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story