தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த ரெயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்


தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த   ரெயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்
x
தினத்தந்தி 22 Oct 2022 6:45 PM GMT (Updated: 22 Oct 2022 6:45 PM GMT)

தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த ரெயில்வே ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

கிருஷ்ணகிரி

ஓசூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை சேர்ந்த மனோன்மணி மகன் பிரபாகரன் (வயது 30). ரெயில்வே ஊழியர். இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி பணியின்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் பிரபாகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஓசூர் காவேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பிரபாகரனுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார்.

பின்னர் அரசு வழிகாட்டுதல்படியும், பிரபாகரனின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்றும் அவருடைய இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகிய உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் மாற்று அறுவை சிகிச்சை மேலாளர் ஜான்சன் கூறுகையில், கல்லீரல், நுரையீரல், இதயம், சிறுநீரகம் மற்றும் கருவிழி போன்ற உறுப்புகள் மற்றும் திசுக்கள் தானமாக பெறப்பட்டன. இந்த பணியில் 40 டாக்டர்கள் ஈடுபட்டனர் என்றார்.

இதுதொடர்பாக ஓசூர் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் விஜயபாஸ்கரன் கூறுகையில், உறுப்பு தானம் பொதுமக்களுக்கு அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதன் மூலம் உறுப்பு தேவைப்படுபவர்களுக்கு உதவும் என்றார்.

பின்னர் பிரபாகரனின் இதயம், நுரையீரல் மற்றும் கல்லீரல் சென்னைக்கும், சிறுநீரகங்கள் கோவைக்கும், கண்கள் பெங்களூருவில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ், வேன் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story