நல்லம்பள்ளி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மசாவு உதவி கலெக்டர் விசாரணை

நல்லம்பள்ளி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மசாவு உதவி கலெக்டர் விசாரணை
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
காதல் திருமணம்
நல்லம்பள்ளி அருகே பூமரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருடைய மனைவி குணநந்தினி (வயது 23). இவர்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குணநந்தினி கணவரிடம் கோபித்து கொண்டு சவுளூர் கிராமத்தில் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
பின்னர் குடும்பத்தினர் சமரசம் செய்து கணவர் வீட்டில் குணநந்தினியை அழைத்து வந்து விட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று பூமரத்தூரில் உள்ள கணவர் வீட்டில் குணநந்தினி மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் குணநந்தினியை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மர்ம சாவு
பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குணநந்தினி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து குணநந்தினியின் தந்தை குணசேகர் தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாக அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருமணமான 1½ ஆண்டுகளில் இளம்பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக தர்மபுரி உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார். காதல் திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்பத்திரியில் திரண்ட உறவினர்கள்
இதற்கிடையே இளம்பெண் மர்மசாவு குறித்து அறிந்த உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். அப்போது அங்கு வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ.வும் ஆஸ்பத்திரிக்கு வந்தார். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. அங்கிருந்த அதியமான்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமியிடம் இளம்பெண் மர்மசாவு குறித்து உரிய விசாரணை நடத்தி சாவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதை கேட்ட இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.






