பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு


பாப்பாரப்பட்டி அருகே  மின்சாரம் தாக்கி டிரைவர் சாவு
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:45 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் இறந்தார்.

ஆட்டோ டிரைவர்

தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள கண்ணுகாரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் தர்மன் (வயது 39). சென்னையில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவருடைய மனைவி ஆஷா (35). இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தர்மன் கண்ணுகாரம்பட்டிக்கு வந்தார்.

இதையடுத்து நேற்று காலை அவர் விவசாய நிலத்துக்கு சென்று வருவதாக மனைவியிடம் கூறி சென்றார். ஆனால் வெகு நேமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்ைல. இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி மற்றும் குடும்பத்தினர் விவசாய நிலத்துக்கு சென்றனர்.

மின்சாரம் தாக்கியது

அங்கு ஆழ்துளை கிணறு அருகே மின்கம்பியில் உள்ள வயர் கொக்கியில் மாட்டி தர்மன் இறந்து கிடப்பதை கண்டு குடும்பத்தினர் அலறினர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் இறந்த தர்மனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் விவசாய நிலத்துக்கு சென்ற தர்மன் அங்கு ஆழ்துளை கிணற்றின் மோட்டாரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததை கண்டார். இதையடுத்து விவசாய நிலத்தில் நீர் பாய்ச்சுவதற்காக மரக்குச்சி மூலம் மின்கம்பத்தில் உள்ள கம்பியில் வயர் கொக்கியை மாட்டி மின்சாரம் எடுத்தபோது மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்துள்ளது.

சோகம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் டிரைவர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story