இண்டூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; நிதி நிறுவன ஊழியர் பலி


இண்டூர் அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதல்; நிதி நிறுவன ஊழியர் பலி
x
தினத்தந்தி 28 Dec 2022 6:45 PM GMT (Updated: 29 Dec 2022 6:25 AM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் பலியானார்.

நிதி நிறுவன ஊழியர்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள ராஜா கொள்ளஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மகன் முனியப்பன் (வயது 21). தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று மாலை வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் இண்டூரில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இண்டீர் அருகே பழைய போலீஸ் நிலையம் பகுதியில் சென்றபோது, எதிரே பென்னாகரத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளும், முனியப்பன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

விசாரணை

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு முனியப்பன் பலத்த காயம் அடைந்தார். மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த மதிகோன்பாளையம் அருகே உள்ள வெங்கடதானூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா (25), கோவிந்தராஜ் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் முனியப்பன் இறந்து விட்டதாக கூறினர். இளையராஜா, கோவிந்தராஜிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து இண்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story