வளையப்பட்டியில்கிணற்றில் மூழ்கி மெத்தை வியாபாரி சாவு


வளையப்பட்டியில்கிணற்றில் மூழ்கி மெத்தை வியாபாரி சாவு
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 13 Jan 2023 6:45 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

நாமக்கல் அருகே வளையப்பட்டியில் உள்ள கிணற்றில் மூழ்கி மெத்தை வியாபாரி இறந்தார்.

மெத்தை வியாபாரி

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் தாமரைகுளம் துருத்திதெக்கம் பகுதியை சேர்ந்தவர் நாசர் (வயது 52). இவர் திருச்சி அருகே உள்ள பாப்பா குறிச்சி பகுதியில் தங்கி கடந்த ஒரு ஆண்டாக மெத்தை வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நாசர் ஈரோடு, பள்ளிபாளையம் பகுதிகளில் மெத்தை வாங்கி கொண்டு தனது நண்பர்களுடன் சரக்கு ஆட்டோவில் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் அடுத்த வளையப்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள ஒரு தொட்டியில் குளிப்பதற்கு முடிவு செய்து அங்கு சென்றனர்.

சாவு

அங்கு தொட்டி தண்ணீர் கடும் குளிராக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நாசர் மற்றும் நண்பர்கள் கிணற்றில் இறங்கி குளித்தனர். அப்போது திடீரென நாசர் தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் அங்கு சென்றனர். மேலும் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற நாமக்கல் தீயணைப்பு படை வீரர்கள் மோகனூர் போலீசாருடன் இணைந்து தேடினர்.

இதையடுத்து நாசர் கிணற்றில் மூழ்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது. எனினும் கிணற்றில் 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருந்ததால் இரவு 10 மணி வரை உடலை தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) காலை உடலை தேடும் பணி நடைபெறும் என தீயணைப்பு படை வீரர்கள் தெரிவித்தனர். கிணற்றில் மூழ்கி இறந்த நாசருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story