பரமத்திவேலூர் அருகேராஜா வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி சாவு


பரமத்திவேலூர் அருகேராஜா வாய்க்காலில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 11 March 2023 7:00 PM GMT (Updated: 11 March 2023 7:01 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள ராஜாவாய்க்காலுக்கு சென்று அங்குள்ள ஒரு திட்டில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென தவறி ராஜா வாய்க்கால் தண்ணீருக்குள் விழுந்தார்.

இதற்கிடையே வீட்டில் இருந்து சென்றவர் வெகு நேரமாகியும் திரும்பி வராததால் குடும்பத்தினர் ராஜா வாய்க்காலுக்கு சென்று பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியாததால் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் வாய்க்காலுக்கு சென்று தண்ணீரில் தேடியபோது தலையில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் லோகநாதனின் உடலை மீட்டனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் லோகநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story