கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 4 பேர் பலி


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட 4 பேர் பலி
x
தினத்தந்தி 5 May 2023 7:00 PM GMT (Updated: 5 May 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் பெண் உள்பட4 பேர் பலியாகினர்.

வாலிபர்

கிருஷ்ணகிரி மாவட்டம் மகராஜகடை அருகே உள்ள கொல்லூர் பகுதியை சேர்ந்தவர் தீர்த்தகிரி (வயது 52). இவர் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி- சென்னை சாலையில் கந்திகுப்பம் ஜங்ஷன் அருகில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தீர்த்தகிரி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி தாலுகாசுண்டேகுப்பம் அருகே உள்ள பாறைகொட்டாயை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 21). இவர் மோட்டார் சைக்கிளில் பாலக்கோடு- காவேரிப்பட்டணம் சாலையில் குட்டப்பட்டி அருகில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேன் அவர் மீது மோதியது. இந்த விபத்தில் நந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெண்

திருப்பத்தூர் பூர்ணா தெருவை சேர்ந்தவர் காதிப் அகமது (28). இவர் கடந்த 3-ந் தேதி மாலை ஓசூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் அவர் மீது மோதியது. இந்த விபத்தில், காதிப் அகமது சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அஸ்சூர் கவுதமபுரத்தைச் சேர்ந்த காமராஜ். இவரது மனைவி சாந்தி (39). இவர் நேற்று முன்தினம் மாலை ஓசூர்- கிருஷ்ணகிரி சாலையில் தனியார் கல்லூரி அருகில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் மோதியது. இதில் சாந்தி சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story