பாலக்கோடு அருகேகிணற்றில் மூழ்கி 2 வயது குழந்தை பலி


பாலக்கோடு அருகேகிணற்றில் மூழ்கி 2 வயது குழந்தை பலி
x
தினத்தந்தி 8 May 2023 7:00 PM GMT (Updated: 8 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே கிணற்றில் மூழ்கி 2 வயது குழந்தை பலியானது.

கட்டிட தொழிலாளி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி சாலா. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு மகளும், 2 வயதில் ரஞ்சித் என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு கணவன், மனைவி இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூருவுக்கு சென்று விட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த ரஞ்சித் அங்குள்ள விவசாய கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான். இதையடுத்து சிறிது நேரத்தில் அவன் தண்ணீரில் மூழ்கி இறந்தான்.

சோகம்

இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கிணற்றில் மூழ்கி பலியான குழந்தை ரஞ்சித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் மூழ்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story