பஞ்சப்பள்ளி அருகேமின்வேலியில் சிக்கி விவசாயி சாவுகாட்டுப்பன்றிக்கு தான் அமைத்த வேலியை மிதித்து பலியான பரிதாபம்


பஞ்சப்பள்ளி அருகேமின்வேலியில் சிக்கி விவசாயி சாவுகாட்டுப்பன்றிக்கு தான் அமைத்த வேலியை மிதித்து பலியான பரிதாபம்
x
தினத்தந்தி 11 May 2023 7:00 PM GMT (Updated: 11 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே காட்டுப்பன்றிக்கு தான் அமைத்த மின்வேலியில் சிக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

விவசாயி

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடானூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவருடைய மகன் நவீன் (வயது 30), விவசாயி. திருமணமாகாத இவருக்கு, கிராமத்தின் அருகே வனப்பகுதியையொட்டி விவசாய நிலம் உள்ளது. அந்த வயலில் தந்தை, மகன் இருவரும் நெல் சாகுபடி செய்திருந்தனர்.

கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் நவீனின் வயலுக்குள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இதனால் நெற்பயிரை காட்டுப்பன்றிகளிடம் இருந்து பாதுகாக்க தந்தை, மகன் சேர்ந்து வயலை சுற்றி மின்வேலி அமைத்தனர்.

மின்வேலியில் மிதித்து பலி

இந்த நிலையில் நேற்று அதிகாலை நவீன் வயலுக்கு சென்றார். அங்கு தான் மின்வேலி அமைத்ததை மறந்து அவர் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அப்போது மின்வேலியில் தெரியாமல் அவர் மிதித்ததில், நவீன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

இதனிடையே காலையில் அந்த வழியாக சென்றவர்கள் நவீன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் பஞ்சப்பள்ளி போலீசார் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

சோகம்

அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின்வேலியில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் போலீசார் அங்கு சென்று இறந்த நவீனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காட்டுப்பன்றியில் இருந்த நெற்பயிரை காக்க, தான் அமைத்த மின்வேலியில் தானே சிக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story