ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் பலிஉடல்கள் மீட்பு


ஒகேனக்கல்லில்காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் பலிஉடல்கள் மீட்பு
x
தினத்தந்தி 28 May 2023 7:00 PM GMT (Updated: 28 May 2023 7:01 PM GMT)
தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் குளித்தபோது அடித்து செல்லப்பட்ட தந்தை, மகன் பலியானார்கள். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

சலூன்கடைக்காரர்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள மருக்காராம்பட்டியை சேர்ந்தவர் அப்பாவு (வயது 43). இவர் எலுமல்மந்தையில் சலூன் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அப்பாவு தனது மகன் மேகவர்ஷன் (7) மற்றும் உறவினர்கள் 15 பேருடன் ஒகேனக்கல்லுக்கு சென்றார்.

அங்கு பல்வேறு இடங்களை சுற்றிபார்த்த அவர்கள் ஆலம்பாடி புளியமரத்து மேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது அப்பாவு, மகன் மேகவர்ஷனை தோளில் சுமந்து கொண்டு ஆற்றை கடந்து மறுகரைக்கு செல்ல முயன்றார்.

ஆனால் எதிர்பாராதவிதமாக தந்தை, மகன் இருவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதையடுத்து உறவினர்கள் ஒகேனக்கல் போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட தந்தை, மகனை தீவிரமாக தேடினர். ஆனால் நேற்று முன்தினம் அவர்களால் 2 பேரையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல்கள் மீட்பு

இந்த நிலையில் நேற்று ஆலம்பாடி காவிரி ஆற்றில் தந்தை, மகன் இருவரும் இறந்த நிலையில் அவர்களின் உடல்களை தீயணைப்பு படையினர் கைப்பற்றினர். அவர்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை, மகன் காவிரி ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் மருக்காராம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story