நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி


நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலி
x
தினத்தந்தி 12 Jun 2023 7:00 PM GMT (Updated: 13 Jun 2023 9:30 AM GMT)
நாமக்கல்

நாமகிரிப்பேட்டை:

நாமகிரிப்பேட்டை அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலியானாள்.

சிறுமி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள பச்சுடையாம்பாளையம் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் பாரதி. இவருடைய மகள் சுவேதா (வயது 17). 10-ம் வகுப்பு படித்து உள்ளார்.

இந்த நிலையில் நேற்று சுவேதா தனது தாயார் தனலட்சுமியுடன் அதே பகுதியை சேர்ந்த விவசாயி வெங்கடாசலம் என்பவரது தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றுள்ளார். இதையடுத்து சிறுமி மதியம் சாப்பிடுவதற்காக அருகில் உள்ள 13 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் முகம், கை, கால்களை கழுவுவதற்காக சென்றார்.

சோகம்

அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தண்ணீரில் மூழ்கிய அவர் மயங்கிய நிலையில் கிடந்ததாக தெரிகிறது. உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு நாமகிரிப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து சென்ற நாமகிரிப்பேட்டை போலீசார் சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தண்ணீர் தொட்டியில் மூழ்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story