தேனி அருகே மரணம் அடைந்ததாசில்தார் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம்


தேனி அருகே மரணம் அடைந்ததாசில்தார் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானம்
x
தினத்தந்தி 14 Oct 2023 6:45 PM GMT (Updated: 14 Oct 2023 6:45 PM GMT)

தேனி அருகே மரணம் அடைந்த தாசில்தார் உடல் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

தேனி

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 82). ஓய்வு பெற்ற தாசில்தார். வயது முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் அவர் நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். அவர் ஏற்கனவே உடல் தானம் செய்ய தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பதிவு செய்து இருந்தார். தனது குடும்பத்தினரிடமும் தனது மரணத்துக்கு பிறகு உடலை தானமாக கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அவர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவருடைய உடலை தானமாக கொடுக்க அவருடைய குடும்பத்தினர் முன்வந்தனர்.

இதையடுத்து நேற்று வடபுதுப்பட்டியில் அவருடைய உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன. பின்னர் அவருடைய வீட்டில் இருந்து தேனி அரசு மருத்துவ கல்லூரிக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மருத்துவ குழுவினரிடம் உடல் தானமாக கொடுக்கப்பட்டது. உடலை பெற்றுக் கொண்ட மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி அதிகாரிகள், மருத்துவ குழுவினர் கோவிந்தராஜின் குடும்பத்தினருக்கு பாராட்டு தெரிவித்தனர். அவருடைய உடல் மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வி கற்றலுக்கும், ஆய்வுக்கும் பயன்படுத்தப்படும் என்று மருத்துவத்துறையினர் தெரிவித்தனர்.


Next Story