மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்


மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்
x

ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளை தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது. சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

புதுக்கோட்டை

இணைப்பது கட்டாயம்

தற்போது வங்கி கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாய மாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணையத்தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.

ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.

அமைச்சர் விளக்கம்

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தை கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, 'ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.

எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் வருமாறு:-

சர்வர் பிரச்சினை

புதுக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீராம்:- ''நான் ஆன்லைனில் ஏற்கனவே மின்சார கட்டணம் செலுத்தி விட்டேன். தற்போது ஆதார் எண் இணைப்பதற்காக புதுக்கோட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்தில் மின்கட்டணம் செலுத்துமிடத்திற்கு வந்தேன். எனது சொந்த வீட்டிற்கு மின்சார கட்டணம் செலுத்துகிற நிலையில் எனது ஆதார் எண் கொடுத்தேன். ஆனால் சர்வர் பிரச்சினை காரணமாக இயங்கவில்லை. மின்சார இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது அரசின் முடிவு என்றாலும் அதற்கேற்ப வசதிகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். மின்சார இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது எப்படி? என்பது குறித்து சாதாரண மக்களுக்கும் தெரியும் வகையில் செய்ய வேண்டும். மேலும் மின்சார வாரிய அலுவலகத்தில் கட்டணம் செலுத்துமிடத்தில் விழிப்புணர்வு பதாகை வைக்கலாம். மின்சார வாரிய அலுவலகத்திலே மின்நுகர்வோர்கள் ஆதார் எண்ணை இணைக்கும் வசதியை முழுமையாக ஏற்படுத்த வேண்டும்.''

பெரும் சிரமம்

கந்தவேல்:- ''மின்சார இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமத்தை கொடுக்கிறது. நான் மின்சார கட்டணம் செலுத்த அலுவலகத்திற்கு வந்தேன். ஆனால் ஆதார் எண் இணைத்தால் தான் கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவித்துவிட்டனர். அதனால் மின்கட்டணம் செலுத்தவில்லை. ஆதார் எண்ணை இணைத்த பின்பு தான் கட்ட வேண்டும் என்பது தேவையில்லாத ஒன்று. இது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை கொடுக்கிறது. ஆதார் எண் இணைப்புக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும்''.

மின் மானிய மோசடி

விராலிமலை தாலுகா, சாத்திவயல் கிராமத்தை சேர்ந்த விவசாயி சுரேஷ்:- மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்றாக கருதுகிறேன். இதனால் மின் மானிய மோசடிகளை எளிதில் தவிர்க்க இயலும். ஒரே நபர் பல இணைப்புகளின் மூலம் 100 யூனிட்டுக்கு மேல் இலவசம் பெறுவதை தவிர்க்க இயலும். வாடகைக்கு குடியிருப்போர் தங்களுக்கு உண்டான இலவச மின்சாரத்தை வீட்டு உரிமையாளர் அனுபவிப்பதை தவிர்த்து உண்மையான மின் பயனாளி பயன் பெற இயலும். மின் இணைப்புடன் ஆதார் இணைப்பதால் மானியம் பெறக்கூடிய நபர்களையும் இலவசமாக வழங்கப்படும் மொத்த மின்சார யூனிட்டுகளையும் அரசால் எளிதில் கணக்கிட இயலும். இந்த ஆதார் இணைப்பு பற்றி மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பேர் ஆதார் எண்ணை இணைக்க முற்படும்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் கிராமப்புறங்களில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்த தகவல் இன்னும் சரிவர சென்றடையாததால் அதற்கான கால அவகாசத்தை அரசு நீடித்து தரவேண்டும்.

வாடகைதாரர்களுக்கு பாதிப்பு

மணமேல்குடி பகுதியை சேர்ந்த மணிகண்டன்:- மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது ஒரு பக்கம் அரசுக்கு நன்மை தரக்கூடியதாக இருந்தாலும் பொதுமக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கு சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளருக்கு சாதகமாக 100 யூனிட் பயன்படுத்தக்கூடிய வாடகை தாரர்களுக்கு பாதிப்பு ஏற்படும். அதே சமயத்தில் வசதி படைத்தவர்களுக்கு 3 முதல் 4 சர்வீஸ் உள்ளது. அவர்களுக்கு வழங்கும் 100 யூனிட் சலுகையை பறிக்கலாம். மேலும் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்தந்த பகுதிகளில் மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

கால அவகாசம் வழங்க வேண்டும்

கறம்பக்குடி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த ராமசண்முகம்:- மின்இணைப்புடன் ஆதார் எண்ணை சேர்ப்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்கிறபோது ஏன் இந்த அவசரம். பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு தொடர்ந்து கால நீட்டிப்பு வழங்கி 3 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்துகின்ற மின் இணைப்பில் ஆதார் எண்ணை உடனடியாக சேர்க்க வேண்டும் என்பது கிராம மக்களை வெகுவாக பாதிக்கும். புதிய இணைப்பு பெறுபவர்களுக்கு ஆதாரை காட்டாயமாக்கி பின்னர் படிப்படியாக இதை அமல்படுத்த வேண்டும். இறந்தவர்கள் பெயரில் உள்ள மின் இணைப்புகள், வாடகை குடியிருப்பு, செல்போன் எண்ணை இணைக்காத இணைப்பு போன்றவற்றுக்கு என்ன நிலை என தெரியவில்லை. எனவே தேவையற்ற பதட்டம், வீண் அலைச்சல் போன்றவற்றுக்கு பொதுமக்களை ஆளாக்காமல் உரிய கால அவகாசம் வழங்குவதுதான் நல்லது.

இலவச மின்சாரம் பறிபோகும்

ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டையை சேர்ந்த பாரதிதாசன்:- இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டம் இல்லை என்று அதிகாரிகள் கூறி வருகிறார்கள். ஆதார் எண் இணைக்கப்பட்டவுடன் சமையல் கியாஸ் மானியம் பறிபோனது போன்று இலவச மின்சாரமும் பறிபோகும் நிலை இருப்பதாக பலர் கூறுகிறார்கள். எனவே இந்த விவகாரத்தில் மின்வாரியம் தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும் மின்கட்டணம் செலுத்த ஆதார் இணைப்பு கட்டாயம் என்று திணிக்கக்கூடாது. அது ஏழை, எளிய மக்களை பாதிக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

கவுண்ட்டர்களில் வசதி

இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கருத்து கேட்ட போது ''மின் கட்டணம் செலுத்த ஆதார் எண் இணைப்பு கட்டாயம் மற்றும் மின்சார இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு என்பது மின்வாரியத்தின் உத்தரவு. அதன்படி செயல்படுத்தப்படுகிறது. நுகர்வோர்களின் வசதிக்காக அந்தந்த மின்வாரிய அலுவலகத்தில் மின்சார கட்டணம் செலுத்தும் கவுண்ட்டர்களில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்'' என்றனர்.

மின்வாரியம் ஆராயுமா?

மின்சார கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்று அறிவிப்பால் மின் நுகர்வோர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். சில மின்நுகர்வோர்களின் ஆதார் எண் 'லிங்க்' ஆகாததால் அவர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபாரத நடவடிக்கை, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்சினைகளை மின்நுகர்வோர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பிரச்சினைகளை மின்சார வாரியம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்நுகர்வோர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

டேட்டா கார்னர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் இணைப்புகளின் விவரம் வருமாறு:-

வீட்டு மின் இணைப்பு-4,61,534

கடைகள், வணிகம்- 78,345

விவசாயம்- 66,381

வழிபாட்டு தலங்கள்-3,191

தொழிற்சாலைகள்- 3,563

வீடு கட்டுவோரில் தற்காலிகமாக மின் இணைப்பு-10,639

அரசு நிறுவனங்கள்-3,022

கல்வி நிறுவனங்கள் -283

குடிசை தொழில்கள்-3,866

குடிசைகள்-48,622

நகராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து உள்பட உள்ளாட்சிகளில் அலுவலகங்கள் மற்றும் அதன் சார்ந்தவை- 26,851 உள்பட மொத்தம் 7 லட்சத்து 8 ஆயிரத்து 266 மின் இணைப்புகள் உள்ளன.


Next Story