பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும்


பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும்
x

கோட்டூ்ர் பகுதியில் கிளை ஆறுகள்-பாசன வாய்க்கால்களில் பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கோட்டூ்ர் பகுதியில் கிளை ஆறுகள்-பாசன வாய்க்கால்களில் பழுதடைந்துள்ள சட்ரஸ், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் பகுதிக்கு மேட்டூர் அணையில் இருந்து வரும் தண்ணீர் கோரையாற்றுக்கு வருகிறது. இதில் இருந்து முள்ளியாறு, அடப்பாறு, பொண்ணு கொண்டான்ஆறு, சாளுவனாறு ஆகிய கிளைஆறுகளில் பிரிந்து பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி நடைபெறு கிறது. இந்த கிளை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள ரெகுலேட்டர்கள், சட்ரஸ், தடுப்பணைகள், மதகுகள் ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.

பழுதடைந்த சட்ரஸ், மதகுகள்

தற்போது சட்ரஸ், மதகுகள் உள்ளிட்ட அனைத்தும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு திறக்கப்பட்ட மேட்டூர் அணை நீர் ஆறுகளில் வந்தும் பாசன வாய்க்கால்களுக்கு மற்றும் வயல்களுக்கு செல்லாமல் குறுவை சாகுபடி செய்த நெற்பயிர்கள் காய்ந்து கருகி ஆடு, மாடுகள் மேய்ந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

கோட்டூர் அருகே ஆதிச்சபுரம் சிவன் கோவில் அருகில் முள்ளியாற்றில் உள்ள ரெகுலேட்டர் ஆங்கிலேயர்ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்தது. இதன் மூலம் நெம்மேலி, ஓவர்சேரி, குன்னியூர், நெருஞ்சனக்குடி, சபாபதிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 3ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசனம் பெற்று மூன்று போக சாகுபடி நடைபெற்று வருகிறது.

சீரமைத்து தர வேண்டும்

தற்போது இந்த ரெகுலேட்டர் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் சாகுபடி பாதிக்கப்படுமோ? என விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் முள்ளியாறு, அடப்பாறு, பொண்ணு கொண்டான்ஆறு, சாளுவனாறு மற்றும் பாசன வாய்க்கால்களில் பழுதடைந்துள்ள ரெகுலேட்டர், மதகுகள் ஆகியவற்றை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story