கல்லடை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்


கல்லடை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம்
x

தோகைமலை அருகே கல்லடை பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கரூர்

நெல் கொள்முதல் நிலையம் அமைப்பு

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சியில் கோடை நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடையை மும்முரமாக தொடங்கி உள்ளனர். இதனால் கல்லடை பகுதியில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கை ஏற்று நேற்று முன்தினம் முதல் கல்லடையில் தமிழ்நாடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டது.

2 ரக நெல்கள்

இந்த கொள்முதல் நிலையத்தில் 2 ரகங்களாக நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதில் அரசு நிர்ணய விலையாக சண்ண ரகம் (கிரேடு ஏ) ஒரு கிலோ 21 ரூபாய் 60 பைசாவிற்கும், மோட்டா (பெரியது கிரேடு சி) ரகம் ஒரு கிலோ 21 ரூபாய் 15 பைசாவிற்கும் பெறப்படுகிறது. நெல்லின் ஈரப்பதம் 15 முதல் 17 அளவு இருக்க வேண்டும்.

நெல்லில் இருந்து கரிமம் மற்றும் கனிமம் தரம் பார்த்து எடுக்கப்படுகிறது. ஒரு மூட்டைக்கு சாக்குடன் 40.580 கிலோவிற்கு மிகாமல் எடுக்கப்பட்டு அதில் நீலம் நிரம் கொண்ட சணலால் 14 சுத்து தையல் அமைக்கப்படுகிறது. இங்கு விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு பதிவு வரிசைப்படி கொள்முதல் செய்யப்படுகிறது.

3 நாட்களில் பணம் வரவு

முன்பதிவு செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலர் சான்று பெற்ற அடங்கல், விவசாயிகளின் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, நிலத்தின் சிட்டா ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். கொள்முதல் நிலையத்தில் அரசு வழங்கும் சாக்கில் நெல்லை பிடிப்பதால் சாக்குடன் நெல்லை கொண்டு வர தேவையில்லை. குவியலாக கொண்டு வந்தால் போதும்.

கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு 3 நாட்களில் தங்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். இந்த கொள்முதல் நிலையமானது அறுவடை பருவ காலம் முடியும் வரை செயல்படும். கொள்முதல் செய்யப்படும் நெல் அய்யர்மலையில் உள்ள தமிழ்நாடு அரசின் தானியக்கிடங்கில் சேமிக்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்லடை பகுதியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story