விளை நிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல்


விளை நிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல்
x
தினத்தந்தி 20 Feb 2023 6:45 PM GMT (Updated: 20 Feb 2023 6:46 PM GMT)

வேளாண் விற்பனை குழு மூலம் விளை நிலங்களுக்கே சென்று நேரடி நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறையின் கீழ் இயங்கிவரும் ராமநாதபுரம் விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண்மை சந்தை திட்ட பண்ணை வர்த்தகம் மூலம் விவசாயிகளின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட பகுதிக்குட்பட்ட நயினார்கோவில், மூவலூர் கிராமத்தில் மதிவாணன், உரப்புளி கிராமத்தை சேர்ந்த ரவிச்சந்திரன், பார்த்திபனூர் புதுக்குடி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணன், சுப்பையா மற்றும் பொதுவக்குடி வினோத் மற்றும் முத்துமாணிக்கம் ஆகியோரிடம் 727 மூடை நெல் ரூ.8 லட்சத்து 68 ஆயிரத்துக்கு விளைநிலங்களிலேயே நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் ஒரு மூடைக்கு கூடுதலாக ரூ.70 முதல் ரூ.100 வரை இடைத்தரகர் இன்றி அதிக லாபத்திற்கு விற்று பயனடைந்து உள்ளனர்.

மேலும் விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல் கொள்முதல் செய்யப்படுவதால் ஏற்றுக்கூலி, இறக்குகூலி, வண்டி வாடகை, கமிஷன் இல்லாமல் விவசாயிகள் கூடுதல் லாபம் அடைந்து வருகின்றனர். பரமக்குடி ஒழுங்குமுறை விற்பனைக்கூட பகுதியில் மிளகாய், பருத்தி சாகுபடி காலம் என்பதால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேரடியாக விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம் என்று ராமநாதபுரம் விற்பனைக்குழு செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story