சீன நாட்டு பானை ஓடுகள், அச்சு முத்திரைகள் கண்டெடுப்பு


சீன நாட்டு பானை ஓடுகள், அச்சு முத்திரைகள் கண்டெடுப்பு
x

மாளிகைமேட்டில் நடந்த 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியில் சீன நாட்டு பானை ஓடுகள், காசு வார்ப்பு, அச்சு முத்திரைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அரியலூர்

பழங்கால மண்பானை

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே மாளிகைமேடு பகுதியில் தமிழக அரசு தொல்லியல் துறையின் சார்பில் 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வந்தது. இந்த அகழாய்வு பணியின்போது கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி பழங்கால தங்ககாப்பு கண்டெடுக்கப்பட்டது.

இந்நிலையில் மேலும் நடந்த அகழாய்வு பணியின்போது மார்ச் 25-ந் தேதி பழங்கால மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த அகழாய்வு பணியில் முதல் முறையாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த சிகப்பு நிற மண்பானை 25 செ.மீ. உயரமும், 12.5 செ.மீ. அகலமும் கொண்டதாகும்.

செங்கல் சுவர்

தரையில் இருந்து 18 செ.மீ. ஆழத்தில் இந்த பானை கிடைக்கப்பெற்றது. மேலும் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் தொடர்ச்சியாக 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. யானை தந்தத்தால் ஆன மனித உருவம் இடுப்பிற்கு கீழே உள்ள பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உருவத்தின் உயரம் 1.8 செ.மீட்டரும், அகலம் 1.5 செ.மீட்டரும், 1 கிராம் 100 மில்லி எடை மதிப்பும் உள்ளது.

இவை சோழர்களின் கலையை பின்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் போன்ற அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட அகழ்வாராய்ச்சியின் போது செங்கல் அமைப்பு மற்றும் ஏராளமான அலங்காரத்துடன் கூடிய கூரை ஓடுகள், அரண்மனையின் கட்டமைப்பு எச்சங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

3-ம் கட்ட அகழாய்வு

இதுவரை இந்த அகழ்வாராய்ச்சி பணியில் கிடைத்த பழங்கால பொருட்களில் சீன மண்பாண்டங்கள், செப்பு நாணயங்கள் மற்றும் செம்பு பொருட்கள், இரும்பு ஆணிகள், கண்ணாடி மணிகள் மற்றும் வளையல்கள், அலங்கரிக்கப்பட்ட கற்கள் ஆகியவையும் அடங்கும்.

கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி தொடங்கியது. இதில் மாளிகை மேட்டில் தற்போது 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 16 குழிகள் தோண்டப்பட்டு, 21 பணியாளர்களைக் கொண்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

சீன பானை ஓடுகள்

இந்த நிலையில், மாமன்னன் ராஜேந்திர சோழன் காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரண்மனை சுவர்கள், சீன வளையல்கள், இரும்பினாலான ஆணிகள் உள்பட இதுவரை 461 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 11-ம் நூற்றாண்டில் தமிழகத்திற்கும், சீன நாட்டிற்கும் இடையிலான வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில் சீன பானை ஓடுகள், காசு வார்ப்பு, சுடு மண்ணால் அலங்கரிக்கப்பட்ட அச்சு முத்திரை ஆகிய 3 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை பத்திரமாக தொல்லியல் துறை மீட்டு மாளிகை மேட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். மேலும் இது போன்ற பழங்கால பொருட்களும், அரிய பொக்கிஷங்களும் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.


Next Story