தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைக்கிணறுகள் கண்டெடுப்பு


தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைக்கிணறுகள் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் சங்ககால உறைக்கிணறுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை அழிவின் விளிம்பில் இருப்பதால் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடப் பட்டுள்ளது.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள பேரங்கியூர் மற்றும் பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் ரமேஷ், ரங்கநாதன், பட்ட ஆய்வு மாணவர்கள் இம்மானுவேல், கோபி மற்றும் அரசு கலைக்கல்லூரி வரலாற்றுத்துறை மாணவர்கள் ஆகியோர் மேற்புற களஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பூமியின் மேற்பரப்பில் 25-க்கும் மேற்பட்ட உறைக்கிணறுகள் இருந்ததை கண்டறிந்தனர். இதில் 9 உறைக்கிணறுகள் நல்ல நிலையில் உள்ளது. மற்ற உறைக்கிணறுகள் சிதைந்த நிலையில் காணப்படுகின்றது. தென்பெண்ணையற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பெரும் மண் அரிப்பு ஏற்பட்டதால் உறைக்கிணறுகள், பூமியின் மேற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ளன. இதுபற்றி அவர்கள் மேலும் கூறியதாவது:-

2 வகைகள்

இந்த உறைக்கிணறுகள் 2 வகைகளாக உள்ளன. ஒன்று சொருகு வகை உறைக்கிணறு, மற்றொன்று அடுக்குவகை உறைக்கிணறு. பேரங்கியூர், பிடாகம் குச்சிப்பாளையம் தென்பெண்ணையாற்றில் கண்டறிந்த உறைக்கிணறுகள் அடுக்குவகையை சார்ந்தவையாகும். வறட்சியான காலங்களில் தண்ணீர் வற்றும்போது இந்த உறைக்கிணறுகள் அக்காலத்து மக்களுக்கு தண்ணீர் தேவையை பெரிதும் பூர்த்தி செய்தன.

மேலும் இது தண்ணீரை தெளியவைக்கவும், மணல் சரியாமல் இருக்கவும் இந்த அடுக்குவகை உறைக்கிணற்று அமைப்பை அக்காலத்தில் ஏற்படுத்தியுள்ளனர். இவற்றிலிருந்து மக்கள் சுகாதாரமான குடிநீரை பெற்றனர்.

சங்க காலத்தை சார்ந்தது

பேரங்கியூர், பிடாகம் குச்சிப்பாளையம் ஆற்றில் கண்டறியப்பட்ட. உறைக்கிணறுகள் சங்க காலத்தை சார்ந்ததாகும். இதன் மூலம் இப்பகுதியில் சங்க காலத்தில் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என தெளிவாக அறியமுடிகிறது.

மேலும் இங்கே இருக்கின்ற உறைக்கிணறுகள் அழிவின் விளிம்பில் இருப்பதால் இதனை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். அரசு அருங்காட்சியகத்தில் இந்த உறைக்கிணறுகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும். தென்பெண்ணையாற்றில் சங்ககால நாகரீகம் சிறந்து விளங்கியிருக்கிறது. இதைப்பற்றிய தொல்லியல் ஆய்வுகள் இன்னும் செய்யப்படாமல் இருக்கிறது. அந்த ஆய்வுகள் நடத்தப்பட்டால் நடுநாட்டு பகுதியில் சங்ககால மக்களின் பண்பாடுகளை வெளிக்கொணரலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story