தேயிலை செடிகளில் நோய், பூச்சி தாக்குதல்


தேயிலை செடிகளில் நோய், பூச்சி தாக்குதல்
x
தினத்தந்தி 4 Aug 2023 9:00 PM GMT (Updated: 4 Aug 2023 9:00 PM GMT)

வால்பாறையில் மாறுபட்ட காலநிலை நிலவுவதால் தேயிலை செடிகளில் நோய், பூச்சி தாக்கி வருகிறது. இதனால் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் மாறுபட்ட காலநிலை நிலவுவதால் தேயிலை செடிகளில் நோய், பூச்சி தாக்கி வருகிறது. இதனால் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேயிலை சாகுபடி

வால்பாறையில் பணப்பயிர்களான தேயிலை, காபி, ஏலக்காய் மற்றும் குருமிளகு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக 13 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தேயிலை சாகுபடி நடைபெறுகிறது. ஆரம்ப காலத்தில் காபி செடிகள் மட்டுமே பயிரிடப்பட்டு இருந்தது. ஆனால் காபி செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பலன் கிடைக்கும் என்பதால் அனைத்து எஸ்டேட் நிர்வாகங்களும் காபி செடிகளை அகற்றிவிட்டு ஆண்டு முழுவதும் பலன் தரக்கூடிய தேயிலை செடிகளை பயிரிட்டனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு காலநிலையை பொறுத்து தேயிலை செடிகளை நோய்கள் மற்றும் பூச்சிகள் தாக்கி வருகிறது. இந்த மாதம், வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்யக்கூடிய மாதம். ஆனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. மாறாக கடுமையான வெயில் வாட்டி வருகிறது. இதனால் தேயிலை செடிகளை கொப்பள நோய் மற்றும் சிவப்பு சிலந்தி பூச்சி தாக்கி வருகிறது.

நோய் தாக்குதல்

இதில் கொப்பள நோய் தாக்கிய தேயிலை செடிகளில் உள்ள இளம் தளிர் இலைகள் சுருண்டு பழுத்து கீழே விழுந்து விடும். மேலும் சிவப்பு சிலந்தி பூச்சிகள் தாக்கி வருவதால் இளம் தளிர் இலைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பச்சை தேயிலை மகசூல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனால் தேயிலை தோட்ட நிர்வாகங்கள் தற்போது தேயிலை செடிகளை தாக்கி வரும் சிவப்பு சிலந்தி மற்றும் கொப்பள நோயை கட்டுப்படுத்த செடிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த காலநிலை மாறி பருவமழை தீவிரம் அடைய தொடங்கினால் மட்டுமே நோய் மற்றும் பூச்சி தாக்குதல் குறையும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story