1,837 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு


1,837 வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
x

பழைய வாக்குப்பதிவு எந்திரங்களை அழிப்பதற்கு வேலூரில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வேலூர்

வாக்குப்பதிவு எந்திரங்கள்

வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் வேலூர் மாநகராட்சி அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் உள்ள குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரங்கள் 2006, 2007-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டவை. 15 ஆண்டுகள் நிறைவு பெற்ற மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகளை அழிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் குடோனில் வைக்கப்பட்டுள்ள பழைய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

அதன்படி கடந்த மாதம் வாக்குப்பதிவு எந்திரங்கள் ஸ்கேன் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் குடோன் திறக்கப்பட்டு, எந்திரங்களை அழிப்பதற்காக பெங்களூருவில் உள்ள பெல் நிறுவனத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் கண்காணித்தார்.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:-

15 ஆண்டுகள்

வேலூர் மாவட்டத்தில் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் தயாரிக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகிறது. எனவே அதை அழிக்கும் நடவடிக்கையாக வேலூரில் இருந்து பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள குடோனில் வைக்கப்பட்டுள்ள 1,167 வாக்குப்பதிவு எந்திரங்களும், 635 கட்டுப்பாட்டு கருவிகளும், மாவட்ட ஊராட்சி குழு அலுவலக கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த 670 வாக்குப்பதிவு எந்திரங்களும், 206 கட்டுப்பாட்டு கருவிகளும் என மொத்தம் 1,837 வாக்குப்பதிவு எந்திரங்களும், 841 கட்டுப்பாட்டு கருவிகளும் அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினார்.


Next Story