கழிவறையை சுத்தம் செய்வதில் பக்கத்து வீட்டினருடன் தகராறுகணவரை தடுக்க வந்த பெண் தவறி விழுந்து சாவு


கழிவறையை சுத்தம் செய்வதில் பக்கத்து வீட்டினருடன் தகராறுகணவரை தடுக்க வந்த பெண் தவறி விழுந்து சாவு
x

கழிவறையை சுத்தம் செய்வதில் பக்கத்து வீட்டினருடன் ஏற்பட்ட தகராறில் கணவரை தடுக்க வந்த பெண் தவறி விழுந்து இறந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த அனகாபுத்தூர் காமராஜபுரம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். தையல்காரர். இவருடைய மனைவி சரிதா(வயது 38). இவர்களுக்கு நகுல்(12) என்ற மகன் உள்ளார். சரிதா, நாகல்கேணியில் உள்ள தோல் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். வாடகைக்கு குடியிருக்கும் இவர்களது வீட்டுக்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் செல்வக்குமார், பாலாஜி என்ற 2 வாலிபர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களது 2 வீடுகளுக்கும் பொதுவான கழிவறையில் செல்வக்குமார் மற்றும் பாலாஜி அசுத்தப்படுத்தியதாகவும், அதனை சுத்தம் செய்வது தொடர்பாக கோபாலகிருஷ்ணனுக்கும், இவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. செல்வக்குமார், பாலாஜி இருவரும் சேர்ந்து கோபாலகிருஷ்ணனுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

வீட்டில் படுத்து இருந்த சரிதா, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் கணவர் தகராறு செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் தகராறில் ஈடுபடும் கணவரை தடுப்பதற்காக வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடிவந்தார்.

அப்போது வீட்டின் படிக்கட்டு அருகே தடுமாறி கீழே விழுந்தார். இதில் சரிதாவின் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோபாலகிருஷ்ணன், உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். அவர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்தபோது, சரிதா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சங்கர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story