விமானம் தரையிறங்க இடையூறு: 146 வீடுகளின் உயரத்தை குறைக்க விமானத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்


விமானம் தரையிறங்க இடையூறு: 146 வீடுகளின் உயரத்தை குறைக்க விமானத்துறை அதிகாரிகள் நோட்டீஸ்
x

கோப்புப்படம்

கொளப்பாக்கம் ஊராட்சியில் விமானம் தரையிறங்க இடையூறாக உள்ளதாக 146 வீடுகளின் உயரத்தை குறைக்க விமானத்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எல்லையின் ஒரு பகுதியில் சென்னை விமான நிலையத்தின் சுற்றுச்சுவர் அமைந்துள்ளதால் விமான நிலைய விரிவாக்க பணிக்காக இங்குள்ள சில வீடுகளை கையகப்படுத்த போவதாக ஏற்கனவே விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

தற்போது விமானம் தரை இறங்குவதற்காக இங்குள்ள ஒரு பகுதியில் வீடுகளின் உயரம் இடையூறாக இருப்பதாக கூறி விமான நிலைய அதிகாரிகள் கொளப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட 146 வீடுகளின் உயரத்தை குறைப்பதற்காக நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

குறிப்பாக இடத்திற்கு ஏற்றாற்போல ஒவ்வொரு வீடும் 5 மீட்டரில் இருந்து 9 மீட்டர் வரை உயரம் குறைக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொளப்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் குடியிருப்புகளின் உயரத்தை குறைக்க வலியுறுத்திய விமான நிலைய அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மாலதி எசுபாதம் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அது மட்டுமின்றி இங்குள்ள விமான நிலைய விரிவாக்க பணிக்காக குடியிருப்புகளை கையகப்படு்த்த கூடாது எனவும் அதற்கு தடையில்லா சான்றுகள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து விமான நிலைய அதிகாரிகளை நேரில் சந்தித்து மேலும் மனு கொடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய உள்ள நிலையில் இங்குள்ள குடியிருப்புகளின் உயரத்தை ஏன் குறைக்க வேண்டும் என கேள்வி எழுப்பினர். 146 வீடுகளின் உயரத்தை குறைக்க அளித்திருக்கும் நோட்டீசில் ஊராட்சி மன்ற தலைவரின் வீடும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வீட்டின் உயரங்களை குறைக்க வலியுறுத்தி வரும் விமானத்துறை அதிகாரிகள் அதற்கான இழப்பீடு தொகையை எவ்வாறு வழங்குவார்கள் எனவும் தொடர்ந்து இந்த குடியிருப்பு வாசிகளை அச்சுறுத்தும் பணியில் ஈடுபட்டால் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story