ஓசூரில் நிறைவு நாளில்80 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


ஓசூரில் நிறைவு நாளில்80 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x
தினத்தந்தி 24 Sep 2023 7:30 PM GMT (Updated: 24 Sep 2023 7:31 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூரில் நேற்று நிறைவு நாளில் 80 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. மும்பை, ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு இணையாக ஓசூரிலும் ஆண்டுதோறும் பிரமாண்ட விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், சிவசேனா கட்சியின் இளைஞர் அணி, இந்து முன்னணி, ஸ்ரீராம் சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள், பல்வேறு குழுக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் ஓசூர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன.

பாலபூர் விநாயகர், சனாதன விநாயகர், மகாராஜா விநாயகர், வல்லப விநாயகர் என பல்வேறு பெயர்களில் பிரமாண்ட செட்கள் அமைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளுக்கு கடந்த ஒரு வாரமாக நாள்தோறும் பக்தர்கள் சிறப்பு பூஜை நடத்தி தரிசனம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் பெரும்பாலான சிலைகள் ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

நீர்நிலைகளில் கரைப்பு

இந்த நிலையில் நிறைவு நாளான நேற்று 85 சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் கொண்டு சென்று ஓசூர் ராமநாயக்கன் ஏரியிலும், மற்ற சிலைகள் கெலவரப்பள்ளி அணை, சாந்தபுரம் ஏரி, தென்பெண்ணை ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய 4 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மேற்பார்வையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் என 1,400 போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

ஓசூர் மாநகர பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் பாகலூர் ரோடு, ராம்நகர், எம்.ஜி.ரோடு, நேதாஜி ரோடு, தாலுகா அலுவலக சாலை, எரித்தெரு வழியாக தாரை, தப்பட்டை மற்றும் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று ராமநாயக்கன் ஏரியில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின்போது சிலைகள் முன்பு இளைஞர்கள், பெண்கள் உற்சாகமாக நடனமாடியவாறு சென்றனர். மேலும் சிலைகள் முன்பு ஆர்வத்துடன் பலர் செல்பி எடுத்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி ஓசூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டதை காணமுடிந்தது.


Next Story